சசிகலாவை பொதுச்செயலராக்குவதா? அதிமுகவினர் கொந்தளிப்பு- வெடித்தது போராட்டம்!
அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதற்கு அக்கட்சி தொண்டர்கள் பல இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவின் கீழ் விசுவாசமாக பணியாற்றுவோம் என்றும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுச் செயலாளராக நியமனம் செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுக்குழுவுக்கு வந்த அதிமுகவினர் இனிப்புகள் வழங்கி இதனை கொண்டாடினாலும் தமிழகத்தின் பல இடங்களில் அதிமுகவினர் இதனை ஏற்காமல் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கத்தில் அதிமுக மகளிரணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா இறந்த துக்கம் 30 நாட்கள் கூட முடியவில்லை அதற்குள் கொண்டாட்டம் எதற்கு என்று தெரிவித்தனர்.
இதேபோல சென்னை பூந்தமல்லி பகுதியில் அதிமுக நகர செயலாளர் தேவேந்திரன் தலைமையில் அதிமுக தொண்டர்கள் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் பகுதியில் அதிமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சசிகலாவை பொது செயலாளராக ஏற்று கொள்ள முடியாது கோஷம் எழுப்பிய அதிமுக தொண்டர்கள் மாதனூர் - ஒடுக்கத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்ததன் மூலம் அதிமுக சசிகலாவின் குடும்ப சொத்தாகிவிடும் என்று ஆம் அத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications