நடிகைகளை முன்னிலைப்படுத்துவது தமிழகத்தின் வியாதி.. சாமி பேச்சு
கோவை: தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சி இந்திய மாநிலங்களிலேயே எதிலும் இல்லாத மோசமான ஆட்சி என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சி " மக்களுக்காக எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை. எல்லா மாவட்டங்களிலும் கொள்ளைகள் ஏராளமாக நடந்து வருகிறது.இந்த ஆட்சி ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களிலேயே நடைபெறும் மோசமான ஆட்சி. வரும் தேர்தலில் அதிமுக.,வை மீண்டும் வர விடாமல் தோற்கடிக்க வேண்டும்.
2016-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜக தனியாக நிற்க போகிறதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடப்போகிறதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பிகார் தேர்தலுக்கு பிறகு பாஜக செயற்குழு கூட்டம் நடைபெறும். அப்போது இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.
ஜெயலலிதா சிறைக்கு போகப்போகிறார். நல்லா உடம்பை கவனிச்சுக்கட்டும். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கண்டிப்பாக தோற்று சிறைக்கு செல்வார். சிறைக்கு சென்ற பிறகு உடம்பு சரியில்லை என்று ஜாமீன் கேட்கக்கூடாது. அவர் ஜெயிலுக்கு போவது உறுதி, சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது.
நடிகர், நடிகைகளை முன்னிலைப்படுத்துவது என்பது தமிழ்நாட்டுடைய வியாதி, நடிகர்கள் எல்லாக் கட்சியிலுமே இருக்கிறார்கள், காங்கிரஸ் கட்சியில் மட்டுமே இல்லை.
வைகோ சொல்வதை யாராவது நம்புவார்களா?. நீங்கள் தான் நம்புவீர்களா?, பிரபாகரன் உயிரோடு இருப்பதாக வைகோ இன்றும் பேசி வருகிறார். அவரது நம்பிக்கை அவருடனேயே இருக்கட்டும்.
விருதுகளை திருப்பி கொடுக்கும் எழுத்தாளர்கள் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு முதலில் இந்த விருதுகளே கிடைத்திருக்க கூடாது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை மத்திய அமைச்சர்கள் யாரும் தரக்குறைவாக பேசவில்லை. அப்படி எந்த அமைச்சராவது பேசியிருந்தால் அவர் மீது வழக்கு தொடரட்டும். அவர்களுக்காக நானே வாதாடுவேன். அவ்வாறு வழக்கு போடுபவர்களை ஒரு நாளைக்குள் காலி செய்துவிடுவேன். இது காங்கிரஸ் கட்சியும் மற்ற வெளிநாட்டு சக்திகளும் சேர்ந்து செய்யும் சதி என்றார் சாமி.