நாகர்கோவில் திரையரங்கில் அஜித் படம் பாதியில் நிறுத்தம்.. ரகளை செய்த ரசிகர்கள் வெளியேற்றம்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள ஒரு திரையரங்கில் வியாழக்கிழமை திரையிடப்பட்ட நடிகர் அஜித்குமார் நடித்த திரைப்படம், இயந்திரக் கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களை போலீசார் வெளியேற்றினர்.
நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் அஜித் நடித்த "என்னை அறிந்தால்' திரைப்படம் வியாழக்கிழமை இரவு 10.30க்கு திரையிடப்பட்டது. படத்தைக் காண திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்நிலையில், இடைவேளைக்குப் பிறகு படம் ஓடத் தொடங்கிய சிறிது நேரத்தில் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திரையரங்கு ஊழியர்கள் அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, படத்தை திரையிடக் கோரி ரசிகர்கள் கூச்சலிட்டதுடன், திரையரங்கின் கண்ணாடியையும் அடித்து உடைத்தனர்.
கோட்டாறு மற்றும் வடசேரி போலீசார் அங்கு வந்து ரசிகர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால், ரசிகர்களோ தொடர்ந்து அங்கு ரகளை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.