அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவுக்கு நீங்களும் வாங்க.. ஸ்டாலினுக்கு கிராம மக்கள் நேரில் அழைப்பு
அலங்காநல்லூரில் வரும் 10ம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு விழாவிற்கு மு.க. ஸ்டாலினை கிராம மக்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
சென்னை: பெரும் போராட்டத்திற்கு பிறகு அலங்காநல்லூரில் வரும் 10ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை அலங்காநல்லூர் கிராம மக்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கிராம பொதுமக்கள், வலசை கிராமத்து மக்கள், குறவன்குளம் கிராம பொது மக்கள், ஒத்தவீடு கிராம மக்கள் மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ஜல்லிக்கட்டு மீட்புக்குழுவினர், மாணவர் குழுவினர், அனைத்து சமுதாய இளைஞர் நலச் சங்கத்தினர் இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்திற்கு வந்து மு.க. ஸ்டாலின் சந்தித்தனர்.

அப்போது, ஜல்லிக்கட்டு போட்டிகளை தடையின்றி நடத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டம், ரயில் மறியல், உண்ணாவிரதம் என தொடர்ந்து போராட்டங்களை தலைமையேற்று நடத்தியதற்காக நன்றிகளை தெரிவித்துக் கொண்ட விழாக்குழுவினர், ஜல்லிக்கட்டு விழாவிற்கு நேரில் வருமாறு அழைப்பு விடுத்தனர்.
இதுகுறித்து, திமுக எம்எல்ஏ மூர்த்தி, ஜல்லிக்கட்டு பிரச்சனையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடத்தியதை குறிப்பிட்டார். ஸ்டாலின் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கிறோம் என்று மூர்த்தி நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications