ஜெயலலிதா பிரதமரானால் தீவிரவாதம் ஒழியும்... நெல்லையிலிருந்து ‘மதுரை’ ஆதீனம்
நெல்லை: ஜெயலலிதா பிரதமரானால் நிச்சயம் தீவிரவாதம் ஓழியும் எனவே அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து அவரைப் பிரதமராக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார் மதுரை ஆதீனம்.
அதிமுகவை ஆதரித்தும், ஜெயலலிதாவை பிரதமராக்கும் உறுதியோடும் தேர்தலில் களமிறங்கியுள்ளார் மதுரை ஆதீனம். அதன்படி, தான் கலந்து கொள்ளும் பிரச்சாரக் கூட்டங்களில் எல்லாம் ஜெயலலிதாவை பிரதமராக்குங்கள் என அவர் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று நெல்லை லோக்சபா தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து பாளை மார்க்கெட் திடலில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் விழாவில் பேசியதாவது :-
2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மதுரை ஆதினத்தின் 292-வது ஆதீனமாக நான் உள்ளேன். இந்த ஆதீனம் தமிழ் வளர்த்த ஆதீனம். எனவேதான் தமிழ்நாட்டை சேர்ந்த ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறேன். தேர்தலுக்குப் பிறகு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஜெயலலிதாவை பிரதமராக்கி புதிய அரசை அமைக்க வேண்டும்.
கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களும், இந்துகளுக்கும் புனிதயாத்திரை செல்ல நிதி உதவி செய்து வருபவர் ஜெயலலிதா. கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அ.தி.மு.க.வில் உழைத்தவர்களுக்கு மதிப்பு உண்டு. அ.தி.மு.க. கடவுள் நம்பிக்கை கொண்ட கட்சியாகும். ஜெயலலிதா பிரதமரானால்தான் இந்தியாவில் தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஓழியும். நாடு வல்லரசாகவேண்டுமானால் ஜெயலலிதா பிரதமராக வேண்டும்' என இவ்வாறு மதுரை ஆதீனம் தெரிவித்தார்.