ஆம்பூர் விசாரணை கைதி மரணம்: சி.பி.சி.ஐ.டி விசாரணை துவக்கம்... ஜாமீன் நீடிக்கும் பதற்றம்
ஆம்பூர்: பெண் மாயமானது தொடர்பாக ஆம்பூர் பள்ளி கொண்டா காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஷமீல் அகமது மரணமடைந்ததை. தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த கலவரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை துவக்கியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிபாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா. பள்ளிகொண்டாவில் தோல் பதனிடும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த மே மாதம் 24ம் தேதி திடீரென மாயமானார். இது தொடர்பாக பழனி பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார். அதில் ஆம்பூரை சேர்ந்த ஷாமில் அகமது மீது சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார்.
இதனையடுத்து ஷமில்அகமதுவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் கடந்த 15ம் தேதி விசாரணைக்கு அழைத்து சென்றார். போலீஸ் நிலையத்தில் ஷமில்அகமதுவை, இன்ஸ்பெக்டர் மற்றும் 6 போலீசார் அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
படுகாயம் அடைந்த ஷமில்அகமதுவை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் உயிரிழந்தார்.
இது ஆம்பூரில் கொந்தளிப்பை ஏற்படுத்தவே 500க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஷமில்அகமதுவை தாக்கிய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் ஷமில்அகமதுவின் உறவினர் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சபாரத்தினம், போலீஸ்காரர்கள் நாகராஜ், அய்யப்பன், முரளி, சுரேஷ், முனியன் ஆகிய 7 பேர் மீது குற்ற நடைமுறை சட்டப்பிரிவு 176 (1) பிரிவின்கீழ் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி சிவகடாட்சம் உத்தரவிட்டார்.
கைது செய்ய வலியுறுத்தல்
போலீசாரின் நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தவே, கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில் ஆம்பூரில் சென்னை பெங்களூர் மெயின் ரோட்டில் 500க்கும் மேற்பட்டோர் திரண்டனர். ஷமில் அகமது சாவுக்கு காரணமான ‘‘போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் மற்றும் 6 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்தது போதாது. அவர்களை உடனடியாக கைது செய்து சஸ்பெண்டு செய்ய வேண்டும்'' என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
கலவரமும் தடியடியும்
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென அரசு பஸ், லாரி, கார்கள் மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்கினர். இதில் அந்த வாகனங்களின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன இதில் பயணிகள் காயமடைந்தனர். அதன்பின்னர் லாரிகளை நிறுத்தி அதில் இருந்த டிரைவர்களை தாக்கினர். போராட்டம் கலவரமாக மாறியதால் போலீசார் தடியடி நடத்தினர்.
போலீஸ் மீது தாக்குதல்
கலவரக்காரர்கள் சிலர் போலீசாரை நோக்கி கற்களை வீசியதில் ஒரு கல் எஸ்.பி. செந்தில்குமாரியின் தலையில் விழுந்தது. இதில் அவர் காயம் அடைந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
54 போலீசார் காயம்
கல்வீச்சில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டினர். அப்போது போலீசாரை சிலர் கத்தியாலும் பிளேடாலும் வெட்டினர். இதில் 15 பெண் போலீஸ் உள்பட 54 போலீசார் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் வேலூர், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தீவிரமான தாக்குதல்
இந்த கலவரத்தில் 30க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள், லாரிகள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் நெடுஞ்சாலை பகுதி போர்க்களமாக மாறியது. குறைந்த அளவு போலீசாரே இருந்ததால் அவர்கள் ஒரு கட்டத்தில் பின்வாங்க நேர்ந்தது.
பாதிக்கப்பட்ட பயணிகள்
போராட்டத்தை ஒடுக்க முடியாமல் போலீசார் திணறினர். கலவரம் காரணமாக வேலூரிலிருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் செல்லும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வேலூர் வழியாக வரும் பஸ்களும் அங்கேயே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் நடுவழியில் தவித்தனர்.
தீவைத்து எரிப்பு
கலவரக்காரர்கள் தொடர்ந்து போலீஸ் ஜீப், 5 இருசக்கர வாகனங்கள், 10க்கும் மேற்பட்ட கடைகளை தீவைத்து கொளுத்தினர்.
இரவு 8 மணிக்கு தொடங்கிய கலவரம் 1 மணிவரை நீடித்ததால் 5 மணி நேரம் ஆம்பூர் போர்களமாக மாறியது. இந்த சம்பவத்தை அடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
கைது செய்யப்பட்ட அனைவரும் வேலூர் ஆண்கள் சிறை சிறுவர்கள் சிறை கடலூர் மத்திய சிறை சேலம் மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை ஜாமீனை விடுவிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முயற்சி மேற்கொண்டுள்ளது. இக்கலவரத்தால் வியாபாரத்தை இழந்து தவிக்கும் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு உடனடியாக உதவி செய்து அவர்கள் வியாபாரம் தொடங்க உதவி செய்யவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது
சி.பி.சி.ஐ.டி விசாரணை
ஆம்பூர் கலவரம், ஷமில் அகமது மரணம், பவித்ரா மாயமானது வழக்குகளை ஆம்பூர் தனிப்படையினர் விசாரித்து வந்தனர். இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றி, டி.ஜி.பி., அசோக்குமார் உத்தரவிட்டார். இதனைடுத்து வேலுார் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஆம்பூர் வழக்கை விசாரிக்க துவங்கி உள்ளனர். இதற்கான ஆவணங்களை, ஆம்பூர் தனிப்படையினரிடம் இருந்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் பெற்றனர். உயிழந்த ஷமில் அகமதுவின் குடும்பத்தினரிடமும், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தேசிய பாதுகாப்பு சட்டம்
இதனிடையே ஆம்பூரில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கலவரத்துக்கு காரணமான அமைப்புகளை கண்டு பிடித்து தடை செய்ய வேண்டும் என்று இந்து மகா சபா அமைப்பின் தலைவர் வீர்.வசந்தகுமார் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ளதால் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.