அம்மா மக்கள் முன்னேற்ற அமைப்பு- புதிய கட்சி தொடங்கினார் ஹூசைனி
அம்மா மக்கள் முன்னேற்ற அமைப்பு என்ற புதிய கட்சியை ஹுசைனி தொடங்கியுள்ளார்.
சென்னை: பிரபல தற்காப்புக் கலை கலைஞரான ஹுசைனி அம்மா மக்கள் முன்னேற்ற அமைப்பு' என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா,சிறையிலிருந்து விடுதலையாக வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொள்ளும் நிகழ்ச்சியை தற்காப்புக் கலை கலைஞரான ஹூசைனி நடத்தினார். இதனைத் தொடர்ந்து அதிமுக வட்டாரத்தில் அந்த கட்சியின் விசுவாசியாக அறிமுகமானார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காணாமல் போயிருந்த ஹூசைனி,தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற அமைப்பு என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்த பின்னர்,அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெங்கையா நாயுடு எனக்கு 15 ஆண்டு கால நண்பர்.கட்சி குறித்து விவாதிப்பதற்காக அவரை சந்திக்கவில்லை.ஆனால் கட்சிக்கான வாழ்த்துகளை அவரிடம் பெற்றேன் என ஹுசைனி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் மோசமான அரசியல் நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்து வருவதாகவும்,எனவே அதனை மாற்றும் வகையில் அரசியலில் குதிக்கும் முடிவை எடுத்துள்ளதாகவும் ஹுசைனி தெரிவித்துள்ளார். என்றுமே தான் ஜெயலலிதாவின் ரசிகன்,தொண்டன்,விசுவாசி என்றும் கூறியுள்ளார்.
அம்மா என்று அழைத்தவர்கள் சின்னம்மா என்று அழைக்க முடியாது என்று பலரும் கூறிவருகின்றனர். இந்த நிலையில் முதன் முறையாக அதிமுகவில் இருந்து வெளியேறி அம்மா மக்கள் முன்னேற்ற அமைப்பு என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.