"நாம் விரும்பும் சென்னை".. தலைநகரில் நகர்வலம் வந்த அன்புமணி
சென்னை: நாம் விரும்பும் சென்னை என்ற பெயரில் சென்னை நகர மக்களைச் சந்திக்கும் பயணத்தை பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தொடங்கினார்.
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று அவர் சென்று மக்களைச் சந்தித்து சென்னையை மேம்படுத்தத் தேவையானவை குறித்த கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு வகையில் மக்களைக் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் பாமகவும் பல்வேறு திட்டங்களை அன்புமணியை முன்வைத்து தீட்டி செயல்படுத்தி வருகிறது.
நாம் விரும்பும் சென்னை
அந்த வகையில் நாம் விரும்பும் சென்னை என்ற பெயரில் ஒரு பிரசாரத்தை அன்புமணி இன்று சென்னையில் தொடங்கினார். சென்னையை வளம் மிக்கதாக மேம்படுத்தத் தேவையான மக்கள் கருத்தை அறியும் பிரசாரமாக இதை பாமக வர்ணித்துள்ளது.
பிரசாரம் தொடக்கம்
இந்த பிரசாரம் இன்று காலை தொடங்கியது. சூளைமேட்டில் தனது பிரசாரத்தை அன்புமணி தொடங்கினார். அவருடன் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோரும் உடன் வந்தனர்.
மக்களிடம் கலந்துரையாடல்
இந்த சந்திப்பின்போது மக்களிடம் நீங்கள் சென்னையை எந்த விதத்தில் மாற்றியமைக்க விரும்புகிறீர்கள் என்று கருத்து கேட்டார் அன்புமணி.
பகுதி பகுதியாக
தொடர்ந்து புரசைவாக்கம், தங்கசாலை, ராயபுரம், திருவொற்றியூர் என அன்புமணியின் பிரசாரம் தொடர்ந்தது. அவர் போன இடங்களிலெல்லாம் பெரும் திரளான மக்கள் கூடி அன்புமணியுடன் பேச ஆர்வம் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
3 நாட்கள்
இன்று தொடங்கிய இந்த பிரசாரம் 24ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.