முதுநிலை மருத்துவப் படிப்பில் ஓபிசி ஒதுக்கீடு ரத்து: சமூக நீதிக்கு எதிரானது- அன்புமணி கண்டனம்
முதுநிலை மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினர்களுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்ததற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது"
நாடாளுமன்றத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்கள்(மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்டத்தின்படி அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

எந்த அறிவிப்பும் இல்லை
மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி, மாநில அரசுகளுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் இந்த ஒதுக்கீடு பொருந்தும். இதை ராமதாஸ் போராடி பெற்று தந்தார். ஆனால், நடப்பாண்டில் அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு எந்த அறிவிப்பும் இல்லாமல் நீக்கப்பட்டுள்ளது.

சமூக அநிதீயாகும்
இது மிகக்கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதனால், பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த 2160 மாணவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய முதுநிலை மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சதி. சமூக அநீதியாகும்.

27 சதவீதம் வழங்க வேண்டும்
மத்திய அரசின் இந்த சமூக அநீதிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடிப்பதற்கு முன்பாக நடந்த தவறு சரி செய்யப்பட வேண்டும். அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உடனடியாக 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

தேவையான திருத்தங்கள்
அதேபோல், முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையில் இந்திய மருத்துவக் கழகத்தின் விதிகளில் தேவையான திருத்தங்களை செய்யும்படி மத்திய அரசுக்கு வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications