இனி நல்லது நடக்கும்.. ராமதாஸ் உடனான மோதல் முடிவுக்கு வந்துவிட்டதா? அன்புமணி சொன்ன பதில்!
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் உடனான சந்திப்புக்கு பின், இனி நல்லது நடக்கும் என்று அன்புமணி பதில் அளித்துள்ளார். தந்தை, தாயை குடும்பத்துடன் நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதாக கூறிய அன்புமணி, ராமதாஸ் உடனான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்ததா என்ற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையில் மோதல் போக்கு நிலவி வந்தது. இதனால் பாமக யாருக்கு என்ற அதிகாரப் போட்டி தொடங்கியது. ஒரு கட்டத்தில் பாமகவை அன்புமணி கைப்பற்றிய நிலையில், ராமதாஸ் தனி இயக்கம் கண்டு சட்டசபை தேர்தலில் தனது ஆதரவாளர்களை களமிறக்கினார்.

இருந்தாலும் சட்டசபைத் தேர்தல் அன்புமணி தரப்பு பாமக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன்பின் ராமதாஸ் - அன்புமணி இடையில் சுமூக உடன்பாடு ஏர்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் ராமதாஸ் - சரஸ்வதி ஆகியோரின் 61வது திருமண நாளினை முன்னிட்டு அன்புமணி குடும்பத்தினருடன் சென்று ராமதாஸிடம் ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.
தைலாபுரம் வந்த அன்புமணிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின் அன்புமணியை பார்த்த ராமதாஸ், ஆரத்தழுவி வரவேற்றுள்ளார். ஒரு கட்டத்தில் ராமதாஸ் கண்ணீர் விட, பாமக குடும்பத்தினர் மத்தியில் நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன்பின் அன்புமணி மற்றும் செளமியா அன்புமணி இருவரும் ராமதாஸ் - சரஸ்வதி தம்பதியிடம் ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து தனது மகளின் குழந்தையை ராமதாஸிடம் காட்டினார். இதன் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இதன் மூலமாக அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையிலான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தந்தை - மகன் இடையே ஏற்பட்ட இந்த சுமுகமான இணக்கம், பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது.
பாமக குடும்ப ஒற்றுமை கட்சிக்கு புதிய அரசியல் உத்வேகத்தைத் தரும் என்றும், இனி வரும் நாட்களில் பாமகவின் தேர்தல் வியூகங்கள் மற்றும் அதிரடி நகர்வுகள் மிகத் தீவிரமாக இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர். இந்த சந்திப்புக்கு பின் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இனி நல்லது நடக்கும்.. தந்தை, தாயை குடும்பத்துடன் நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications