நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்... ஊழல்தான் மிஞ்சும்.. எதிர்க்கிறார் அன்புமணி
சென்னை: நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவதால் ஊழல் அதிகமாகும் என்பதால் உள்ளாட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் முறையை தமிழக அரசு தொடர வேண்டும் என்று உள்ளாட்சித் தலைவர் மறைமுகத் தேர்தலுக்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தும் வகையில் மசோதா ஒன்றை சட்டப்பேரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி இன்று தாக்கல் செய்துள்ளார். இம்மாற்றம் கண்டிக்கத்தக்கது.
நகர்பாலிகா சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல்கள்தான் நடைபெற்று வந்தன. 2006ம் ஆண்டு முதன்முறையாக பேரூராட்சித் தலைவர் முதல் மாநகராட்சி மேயர் வரை அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளும் மறைமுகத் தேர்தல் மூலம் நிரப்பப்பட்டதற்கு அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மீண்டும் 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, நேரடித் தேர்தல் முறையையே மீண்டும் கொண்டு வந்தார். ஆனால் அதற்கு முற்றிலும் மாறாகவே ஜெயலலிதா தற்போது நடந்து வருகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்களை மறைமுகமாக தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத போது, எதிரணியில் உள்ள உறுப்பினர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் கலாச்சாரம் பெருகும். அப்படி நடைபெற்றால் அது ஜனநாயகப் படுகொலைக்கும், ஊழலுக்கும் வழி வகுக்கும்.
எனவே, உள்ளாட்சித் தலைவர்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மக்களே உள்ளாட்சித் தலைவர்களை நேரடியாக தேர்வு செய்யும் முறையை தமிழக அரசு தொடர வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.