அனிதா சாவுக்கு முதல்வரின் செயலற்ற தன்மை காரணம்.. திவாகரன் மகன் ஜெயானந்த் குற்றச்சாட்டு
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர் போதிய முயற்சி எடுக்கவில்லை என்று அதிமுக அம்மா கட்சி பொதுச்செயலாளர் சசிகலாவின் தம்பி திவாகரன் மகன் ஜெயானந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேஸ்புக்கில் ஜெயானந்த் கூறுகையில், சகோதரிகளில் ஒருவரான அனிதா, நீட்டுக்கு எதிரான இந்த செயலற்ற அரசால்தான் தற்கொலை செய்துகொண்டார். செயலற்ற முதல்வரை நாம் பெற்றுள்ளோம் என்பதற்கு இது சாட்சியல்லவா?
நான் வெறுமனே முதல்வர் மீது குற்றம்சாட்டவில்லை. முதல்வர் நீட் திணிப்புக்கு எதிராக கிளர்ந்து எழவில்லை. ஒருவேளை அவர் அப்படி செய்து நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்காமல் போயிருந்தால் கூட அவரை குற்றம் சொல்லியிருக்க முடியாது.
ஆனால் அவர் சும்மா இருந்துவிட்டார். நான் இந்த அரசுக்கு வாக்களித்தேன், அரசு அமைய உழைத்தேன். இந்த அரசு சொந்தக்காலில் நிற்கத்தான் இதை நான் செய்தேன். எனக்கு இதற்கு பதில் கிடைத்தாக வேண்டும். இவ்வாறு ஜெயானந்த் தெரிவித்தார்.