பரபரக்கும் பண்ருட்டி.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா வீட்டில் ரெய்டு! லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
கடலூர்: பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர் சத்யா பன்னீர்செல்வம். இவரது வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். என்ன காரணம் என்று விசாரித்தால், சத்யா பன்னீர்செல்வம் மீது புகார் இல்லையாம். காரணமே அவரது கணவர் தானாம். ஆம், முன்னாள் எம்.எல்.ஏ சத்யாவின் கணவர் நகராட்சித் தலைவராக பதவி வகித்த போது அவர் மீது சுமத்தப்பட்ட புகார் இன்று ரெய்டில் வந்து முடிந்து இருக்கிறது.

அதிமுக முன்னாள் எம்.எல் ஏ. சத்யா பன்னீர் செல்வத்தின் கணவர் பன்னீர் செல்வம் கடந்த 2011 - 16 இடைப்பட்ட அதிமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சித் தலைவராக பதவி வகித்து இருக்கிறார். அப்போது நகராட்சி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பன்னீர்செல்வம், முன்னாள் பண்ருட்டி நகராட்சி ஆணையர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ரூ.20 லட்சம் டெண்டர் மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவான நிலையில் இன்று காலை முதல் அவருக்கு தொடர்புடைய இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பன்ருட்டியில் உள்ள அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வத்தின் வீடு உட்பட 4 இடங்கள், சென்னையில் உள்ள பண்ருட்டி முன்னாள் நகராட்சி ஆணையர் பெருமாளின் இடம் என மொத்தம் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்ந்து வருகிறது.
தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்தி வரும் இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications