ஆளுக்கு ஒன்றரை லட்சம்.. வீடு தருவதாக சுமார் 50 லட்சம் அபேஷ்! அரசு பேருந்து ஓட்டுநருக்கு முன் ஜாமீன்
சென்னை: நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி 33 பேரிடம் தலா ஒன்றரை லட்சம் ரூபாயை வசூலித்து மொத்தம் ரூ.49.50 லட்சத்தை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உள்ளது.
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த சுரேஷ்பாபு. இவர், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக இவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ரூ.49.50 லட்சம் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என சுரேஷ் பாபு வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை அயம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி 33 பேரிடம் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் வசூலித்து இருக்கிறார் அரசு பேருந்து ஓட்டுநர் சுரேஷ் பாபு. இப்படியே ரூ.49 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வசூலித்த அவர், வீடு வாங்கித் தராமல் ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த அந்தோனி என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளை தனக்கு தெரியும் என்று சுரேஷ்பாபு கூறியதை நம்பி அவரிடம் பணம் கொடுத்ததாகவும், அதை பெற்றுக்கொண்டு பணத்தையும் கொடுக்காமல், வீட்டையும் வாங்கித் தராமல் சுரேஷ்பாபு மோசடி செய்ததாக புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக காவல்துறை டிஜிபி-யிடம் அளித்த புகாரில், சுரேஷ்பாபு மற்றும் அவரது குடும்பத்தினர் மூவர் மீது 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் சுரேஷ்பாபு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 25 லட்சம் ரூபாய்க்கான அசையா சொத்துக்கான ஆவணங்களை எழும்பூரில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். மேலும், மறு உத்தரவு வரும் வரை சம்மந்தப்பட்ட விசாரணை அதிகாரி முன் தினமும் மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்து உத்தரவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications