ஆருத்ரா மோசடி.. சிக்கிய ஊழியர்.. மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய பொதுமக்கள்
ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் ஊழியர்களின் வீடுகளை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் 'ஆருத்ரா கோல்டு, 'ஹிஜாவு', 'எல்.என்.எஸ்.-ஐ.எப்.எஸ்.', 'எல்பின்' ஆகிய 4 நிதி நிறுவனங்கள் முதலீட்டுத்தொகை பெற்று பொதுமக்களிடம் ரூ.13 ஆயிரத்து 700 கோடி மோசடி செய்திருக்கின்றன. இந்த நிறுவனங்களில் ஏமாந்த பொதுமக்களுக்கு உரிய முதலீட்டுத்தொகையை மீட்டு தருவதற்கு ஏற்பாடுகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.

இந்த நிதி நிறுவனங்களில் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்களை கைது செய்வதற்கு சி.பி.ஐ. போலீஸ் உதவியுடன் சர்வதேச போலீஸ் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை பிடித்து கொடுக்க 'ரெட் கார்னர்' நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
'ஆருத்ரா கோல்டு, 'ஹிஜாவு', 'எல்.என்.எஸ்.-ஐ.எப்.எஸ்.', 'எல்பின்' ஆகிய 4 நிதி நிறுவனங்களும் தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 84 ஆயிரம் பேர்களிடம் ரூ.13 ஆயிரத்து 700 கோடி அளவுக்கு முதலீட்டுத்தொகை பெற்று மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 4 நிறுவனங்களில் 1,115 வங்கிக்கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான கார்கள் போன்ற அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறை முன்பு ஒரு முறை கூறும் போது, அசையா சொத்துகளை கணக்கிட்டு வருகிறோம். மேற்கண்ட நிதி நிறுவனங்களிடம் பணத்தை இழந்த பொதுமக்கள் கவலைப்படத்தேவையில்லை. அவர்கள் ஏமாந்த பணத்தை நீதிமன்றம் மூலமாக பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அரக்கோணம் அருகே ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் ஊழியர்களின் வீடுகளை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில், சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளார்கள். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 20 ஆயிரம் ரூபாய் வரை வட்டி தருவதாக கூறி, கோடிக்கணக்கில் முதலீடாக பெறப்பட்டிருக்கிறது. இதனிடையே, பணமோசடி புகாரில் ஆருத்ரா நிறுவனம் மூடப்பட்ட நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஒரு பக்கம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நெமிலி கிளையில் ஊழியர்களாக இருந்த யோகானந்த் , சதீஷ் ஆகியோரின் வீட்டை முதலீட்டாளர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். தொடர்ந்து யோகானந்த் தலைமறைவான நிலையில், சதீஷை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், சதீஷை பாதுகாப்பாக மீட்டனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications