அரசு வக்கீலை பகடைக்காயாக்கி தீர்ப்பை தள்ளி போடலாம், தப்பிக்க முடியாது: ஜெ. பற்றி கருணாநிதி
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டுள்ளார் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு வக்கீலை பகடைக்காயாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றும், தீர்ப்புகளை தள்ளி போகச்செய்யலாமே தவிர; தீர்ப்புகளை மாற்றி தப்பிக்க நிச்சயமாக முடியாது என்றும் கலைஞர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கில் மொத்த சாட்சிகள் 259 பேர்; அதில் 209 சாட்சிகள் கொடுத்துள்ள சாட்சியங்களை பவானிசிங் படித்து முடித்துவிட்டார். இன்னும் 50 பேர் சாட்சியங்களை தான் படிக்க வேண்டும். ஒரு நாள் வேலை தான் மீதம் இருக்கும்.
இந்த நிலையில் தான் உச்ச நீதிமன்றம் வழக்கினை மூன்று வாரங்களுக்கு தடை விதித்துள்ளது. பவானி சிங்குக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த அபராதம் இரண்டு நாட்களுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். அந்த தொகையை செலுத்தாமல் இருக்க, பவானி சிங் செலவழித்திருப்பது எவ்வளவு தெரியுமா? உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் ஒரு வழக்கில் ஆஜராக குறைந்தபட்சம் பத்து லட்சம் ரூபாய் வாங்குகிறார்கள்.
பவானி சிங்குக்காக உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய நாகேந்திரராய் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர் என்பதால் அவருக்கு பத்து லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதைத் தவிர உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இரண்டு லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். எனவே ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை பாதுகாக்க, யாராவது 12 லட்சம் ரூபாயை செலவழிப்பார்களா? அதிலும் பவானி சிங்கின் நிதி நிலையை பார்த்தால் அவர் அரசு வழக்கறிஞர் என்ற அளவில் 12 லட்சம் ரூபாயை கட்டக்கூடிய அளவிற்கு வசதி படைத்தவராக தெரியவில்லை. எனவே அவரை பகடைக்காயாக பயன்படுத்தி, அவருக்காக உச்ச நீதிமன்றத்தில் யாரோ பணம் செலவழித்து, மூத்த வழக்கறிஞரை நியமித்து வாதாடியிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறதா? இல்லையா?
அவ்வாறு பின்பலமாக இருந்தவர்களுக்கு என்ன லாபம்? அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீடித்தால், அவருடைய வாதம் தங்களுக்கு பயன்படும் என்று நினைப்பவர்கள் யார்? அப்படி நினைப்பவர்களுக்கு, இந்த விசாரணையில் மேலும் ஒரு வாய்தா மூன்று வாரங்களுக்கு கிடைப்பதன் காரணமாக, நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக தீர்ப்பு வராமல் செய்யலாம்.
அப்படி தீர்ப்பு சொல்லப்பட்டு விடுமானால், தேர்தல் முடிவினைப் பாதிக்குமோ என்று அஞ்சுகிறார்கள் என்றால், அவர்கள் மடியிலே கனம் இருப்பதாகத்தானே பொருள். வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைப்பதன் காரணமாக, தேர்தலுக்கு முன்பாகத் தீர்ப்பு வருவதை ஒத்தி வைக்க விரும்புகிறார்கள் என்பது தானே பொருள்.
இப்படியெல்லாம் செய்து, வழக்கை திசை மாற்ற நினைப்பவர்கள் யார், எதற்காக அவர்கள் அப்படி செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் நிலையில் தான் தமிழ்நாட்டு வாக்காள பெருமக்கள் இருக்கிறார்கள். அவர்கள் நன்றாகவே சிந்திப்பார்கள், நன்றாகவே முடிவெடுப்பார்கள். தீர்ப்புகளை தள்ளி போகச் செய்யலாமே தவிர; தீர்ப்புகளை மாற்றி தப்பிக்க நிச்சயமாக முடியாது. நியாயமான, நேர்மையான தீர்ப்பு விரைவில் வந்தே தீரும். அப்போது உண்மை ஊருக்கும், உலகத்திற்கும் புரியும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications