திருப்புவனத்தில் பள்ளி நேரத்தில் சரக்கு அடித்துவிட்டு வந்த உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட்!
திருப்புவனத்தில் பணியின்போது மதுபோதையில் தரையில் படுத்திருந்த அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
திருபுவனம் : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் மது அருந்தி விட்டு பள்ளியில் போதை தெளியாமலே படுத்திருந்த உடற்கல்வி ஆசிரியர் ரஜினிகாந்த் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தைச் சேர்ந்த பூவந்தி ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக ரஜினிகாந்த் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று மதியம் 1மணியளவில் பள்ளி நேரத்தில் வெளியே சென்று விட்டு மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். இதையடுத்து அந்த பள்ளியில் உள்ள ஓய்வறையில் ரஜினிகாந்த் மது போதையில் தரையில் தலைகுப்புற படுத்துக்கிடந்தார்.
மாணவர்கள் அதிர்ச்சி
ஆசிரியரை மாணவர்கள் எழுப்ப முயன்றும் அவர் ஃபுல் போதையில் இருந்ததால் கண் திறக்காமலே கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ-மாணவிகள் இது குறித்து அந்த கிராம மக்கள் மற்றும் பிற ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
நேரில் பார்வையிட்ட அதிகாரிகள்
சுமார் 3 மணி நேரமாக ரஜினிகாந்த் போதை தெளியாமல் ஆசிரியர்கள் ஓய்வு அறையிலேயே தலைகுப்புறக் கிடந்தார். இதனையடுத்து இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி(பொறுப்பு) ஷகிதா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொறுப்பு) சூரன் ஆகியோர் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பள்ளிக்கு விடுமுறை
குடிபோதையில் தரையில் படுத்திருந்த உடற்கல்வி ஆசிரியர் ரஜினிகாந்த் மீது தண்ணீர் ஊற்றி போதையை தெளிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் 3மணி நேரம் கழித்தும் அவருக்கு போதை தெளியவில்லை. இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அறிவித்தனர் கல்வி அதிகாரிகள்.
ஆசிரியர் சஸ்பெண்ட்
மாணவ-மாணவிகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய உடற்கல்வி ஆசிரியர் பொறுப்பில்லாமல் மது அருந்திவிட்டு வந்தது கடும் கண்டனத்திற்கு உரியது என்று மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்தார். மேலும் மது போதையில் பணியில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளார்.