அரகண்டநல்லூரில் 8 வயது சிறுவன் அடித்துக் கொலை... சகோதரி, தாயார் படுகாயங்களுடன் மீட்பு!
விழுப்புரம் அருகே சகோதரியை பலாத்காரம் செய்தவர்களை தடுக்கச் சென்ற 8 வயது சிறுவன் தாக்கப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
Recommended Video
விழுப்புரம் : அரகண்டநல்லூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மீதான தாக்குதல் என்பது தொடர்கதையாகிறது. நேற்றைய தினம் எட்டு வயது சிறுவன் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளான், அவனது சகோதரியும், தாயாரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கணவனை இழந்த 45 பெண் தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் வேலம்புத்தூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இவரின் மற்ற 4 பிள்ளைகள் பெங்களூரு மற்றும திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் தந்தை 4 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் 4 பேரும் வெளியூர்களில் வேலை செய்து தாய்க்கு பணம் அனுப்பி வருகின்றனர்.
தாயுடன் வசிக்கும் சிறுமி டி தேவனூரில் உள்ள அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். மற்றொரு மகன் வேலம்புதூரில் உள்ள அரசுப் பள்ளியில் 4ம் வகுப்பு பயின்று வருகிறார்.
நேற்று இரவு இவர்களின் வீட்டில் இருந்து அழுகுரல் கேட்டுள்ளது. அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது உடல் முழுதும் காயங்களுடன் 8 வயது சிறுவன் இறந்து கிடந்துள்ளான். சிறுமியும், அவரது தாயாரும் காயங்களுடன் கிடந்தனர்.
சிறுமி ஆடைகளின்றி இருந்ததை வைத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து உள்ளூர் மக்கள் அரகண்டநல்லூர் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி, அவரது தாயாரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உண்மையில் என்ன நடந்தது என்பது சிறுமியும், அவரது தாயாரும் கண் விழித்தால் மட்டுமே தெரிய வரும்.