டெல்லியில் சசிகலா புஷ்பா... சென்னையில் ஸ்டாலின்... அரசுக்கு ஆக.22ல் செக்
சென்னை: ஆகஸ்ட் 22ம் தேதி டெல்லியில் சசிகலா புஷ்பாவின் முன்ஜாமின் வழக்கும், சென்னையில் திமுகவினர் நடத்தும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தமிழக சட்டசபையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்
முதலில் சட்டசபை நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்ட போது ஆகஸ்ட் 22இல் வருவாய்த் துறை, செப்டம்பர் 1ல் காவல் துறை என மானியக் கோரிக்கை மீதான விவாதம், வாக்கெடுப்பும் நடைபெற இருந்தன. திடீரென்று ஆகஸ்ட் 22இல் வருவாய்த் துறை மானியக் கோரிக்கைக்குப் பதிலாக, காவல் துறை மானியக் கோரிக்கை என்று மாற்றப்பட்டது.

காவல்துறை மானியக்கோரிக்கை தினத்தன்று பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப திமுக திட்டமிட்டிருந்தது. இப்போது சட்டசபையில் இருந்து 80 திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் இதனைக் கண்டித்து ஆகஸ்ட் 22ம் தேதி சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு என்று பொதுக்கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது திமுக.
இது ஓருபுறம் இருக்க ஆகஸ்ட் 22 டெல்லியில் சசிகலா புஷ்பாவின் முன் ஜாமீன் மீதான விசாரணை நடைபெற உள்ளது. அவருக்கு முன் ஜாமீன் கிடைக்கா விட்டால் உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் முடிவில் இருக்கிறாராம்.
சசிகலா புஷ்பா
தி.மு.க எம்.பி திருச்சி சிவாவுடன் ஏற்பட்ட மோதலையடுத்து, அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார் ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா. இதையடுத்து, அவர் அ.தி.மு.க தலைமையின் மீது ராஜ்யசபாவில் குற்றம் சுமத்தினார்.
குவியும் புகார்கள்
சசிகலா வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்கள் இருவர், சசிகலா, அவரது கணவர் மற்றும் மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். கூடவே, ஒப்பந்ததாரர் ஒருவர் பணமோசடிப் புகாரையும் அளித்தார்.
முன்ஜாமீன்
இவ்விரு வழக்குகளிலும் கைது செய்யப்படலாம்' என்பதால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார் சசிகலா. மனுவை விசாரித்த நீதிபதி முத்தா குப்தா, ' வருகிற 22ம் தேதி வரையில் சசிகலாவை கைது செய்யக் கூடாது' எனவும் ' முன்ஜாமீன் பெறுவது குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகவும்' உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
இதைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார் சசிகலா. அந்த மனுவில், ' என் வீட்டில் வேலை பார்த்து வந்த ஜான்சிராணி மற்றும் பானுமதி ஆகியோரை பாலியல் ரீதியாக அடித்து துன்புறுத்தியதாகவும், மொட்டையடித்து வெளியேவிடாமல் அவமானப்படுத்தியதாகவும் தூத்துக்குடி போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பழிவாங்கும் போக்கு
சிலர் தூண்டுதலின் பேரில் இந்தப் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இது தவிர, நெல்லையிலும் என் மீது மோசடிப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. என்னை பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றம்
ஆகஸ்ட் 22ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது, தமிழகத்தில் ஜாமீன் நிலவரம் பற்றி தெரிவிக்க இருக்கிறார். ஒருவேளை ஜாமீன் கிடைக்கவில்லையென்றால், உச்ச நீதிமன்றம் செல்வது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகிறாராம்.
பாஜக ஆதரவு
திமுக, காங்கிரஸ் மட்டுமல்லாது சசிகலாவிற்கு பாஜக முக்கிய தலைவரின் ஆதரவும் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் 22ம் தேதி நடக்க உள்ள வழக்கு விசாரணையை எதிர்நோக்கி உள்ளதாம் அதிமுக தலைமை.
சென்னையில் ஸ்டாலின்
காவல்துறை மானியக்கோரிக்கை நடைபெற உள்ள ஆகஸ்ட் 22ம் தேதி சென்னையில் திமுகவினர் நடத்த உள்ள பொதுக்கூட்டமும் யோசிக்க வைத்துள்ளது. டெல்லியோ சென்னையோ எது நடந்தாலும் சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கையில் முதல்வர் ஜெயலலிதா பேசுவதான் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வரவேண்டும் என்று முன்னேற்பாடுகள் செய்து வருகின்றனராம் அதிமுகவினர். ஆகஸ்ட் 22ல் என்ன நடக்குமோ?












Click it and Unblock the Notifications