செம்மொழி ஆய்வு நிறுவன துணைத் தலைவர் பதவியிலிருந்து அவ்வை நடராஜன் திடீர் நீக்கம்!
சென்னை: கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது செம்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்ட பின்னர், சென்னையில் மத்திய அரசால் நிறுவப்பட்ட செம்மொழி உயர் ஆய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவியில் இருந்து வந்தவரான முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் அவ்வை நடராஜன் திடீரென அப்பதவியலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நடராஜன் ஏன் நீக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை. 7 மாதத்திற்கு முன்புதான் நடராஜன் இப்பதவியில் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
நடராஜனை நீக்கியுள்ள மத்திய அரசு, அவருக்குப் பதில், புதிய துணைத் தலைவராக, சென்னை பச்சையப்பன் கல்லுாரியின் தமிழ் துறை பேராசிரியராக பணியாற்றி, ஓய்வு பெற்ற, பிரகாஷ் என்பவரை நியமித்துள்ளது. இதற்கான உத்தரவை, அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையிலான மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பிறப்பித்துள்ளது.
முன்னதாக செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவராக, மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர்தான் இருந்து வந்தார். இருப்பினும் தமிழ் புலமையும், தமிழ் அறிவும் கொண்ட ஒருவரை, இப்பதவிக்கு நியமிக்க வேண்டும் என்ற திமுக மற்றும் தமிழ் அறிஞர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த மார்ச் 20ம் தேதி, முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராசன் இப்பதவியில் நியமிக்கப்பட்டார்.
ஆனாலும் நடராஜுனுக்கு எந்த விதமான அதிகாரத்தையும், அவர் செயல்படுவதற்குத் தேவையான வசதிகளையும் மத்திய அரசு வழங்கவில்லை. அவமானப்படுத்தி வந்தது. இந்த நிலையில் தற்போது செயல்படாத நிலையிலேயே நடராஜனை நீக்கியுள்ளது மத்திய அரசு.
மோடி அரசு பதவிக்கு வந்த பின்னர் இந்திக் கொள்கை, சமஸ்கிருதக் கொள்கை என கவனம் காட்டி வருகிறது. இந்த நிலையில் கடந்த திமுக ஆட்சியின்போது, திமுகவின் பெரும் முயற்சியால் அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழுக்காக அமைக்கப்பட்ட அமைப்பின் துணைத் தலைவர் பதவியிலிருந்து நடராஜனை நீக்கியுள்ள செயல் தமிழறிஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.