நள்ளிரவில் பரபரப்பு! தென்காசியில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து! ஆறு பேர் படுகாயம்
தென்காசி: கேரள மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்றுவிட்டுத் திரும்பிய ஐயப்ப பக்தர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் ஆறு ஐயப்ப பக்தர்கள் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் இப்போது செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் பலரும் கேரள மாநிலத்தில் உள்ள சபரி மலைக்குச் சென்று திரும்புவார்கள். இந்தாண்டும் கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில், சபரிமலைக்குப் பலரும் சென்று திரும்பி வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலைக்குச் சென்று திரும்பி வருகிறார்கள். பெரும்பாலும் தனியாக கார் அல்லது வேன் வாடைக்கு எடுத்தே சபரி மலைக்குச் சென்று திரும்புகிறார்கள்.
வேன் விபத்து: இந்தச் சூழலில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே விபத்தில் சிக்கியுள்ளது. வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததில், அது தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அச்சன் கோவிலுக்குச் சென்று திரும்பும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை அடுத்துள்ள தேன்பொத்தை என்ற பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. வேன் அதிவேகமாகச் சென்று விபத்தில் சிக்கிய நிலையில், உள்ளே இருந்த ஆறு ஐயப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
படுகாயம்: விபத்தில் சத்தம் கேட்டு உடனடியாக அருகே இருந்தவர்கள் ஓடி வந்து உதவியுள்ளனர். படுகாயமடைந்த ஆறு பேரும் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு மருத்துவர்கள் ஐயப்ப பக்தர்களுக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த திடீர் விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட பகுதியைக் கடந்த செல்வதில் வாகன ஓட்டிகள் சிரமத்தைச் சந்தித்துள்ளனர். இதனால் அங்குப் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. மேலும், இரவு நேரத்தில் இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications