நில அபகரிப்பு வழக்கு: கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார் மு.க.அழகிரி
மதுரை: நில அபகரிப்பு வழக்கில் இடைக்கலா ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை கோர்ட்டில் நேரில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி மதுரை, திருமங்கலம், சிவரக்கோட்டையில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்காக, அப்பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்து விட்டதாக, இந்து அறநிலையத்துறை அதிகாரி, மதுரை புறநகர் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் மு.க.அழகிரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அழகிரி ஜாமீன் கோரி மனு செய்தார். இதை விசாரித்த நீதிபதி, அழகிரிக்கு இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
ஜாமீன் நிபந்தனைப்படி, மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் இன்று மு.க.அழகிரி நேரில் ஆஜரானார். பின்னர் அவர் கையெழுத்துப் போட்டார்.