மதுரை: அழகிரி ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சி
மதுரை: மதுரையில் அழகிரி ஆதரவாளர் ஒருவர் திடீரென்று தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் ஸ்டாலினை எதிர்த்து நடைபெறும் போஸ்டர் யுத்தம் கடந்த 5 மாதங்களாக நீடித்து வருகிறது. லோக்சபா தேர்தலில் திமுகவின் தோல்வியை ஒட்டி மதுரையில் ஸ்டாலினை எதிர்த்து நேற்றையதினம் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இதற்கு ஸ்டாலின் ராஜினாமா செய்வதாக அறிவித்து சில நிமிடங்களில் வாபஸ் பெற்றார்.
இதற்கு கருணாநிதி, அழகிரி என்ற பிள்ளையே தனக்கு இல்லை என்கிற ரீதியில் பேட்டியளித்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் அழகிரி பேட்டியளித்து வருகிறார்.
இந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே வந்த அழகிரியின் தொண்டர் ஒருவர், அழகிரியை வாழ்த்தி முழக்கமிட்டார். திமுகவை காக்க அழகிரியால் மட்டுமே முடியும் என்று கூறிய அவர், அறிவாலயத்திற்கு அழகிரி செல்லவேண்டும் என்று கூறிக்கொண்டே தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றினார்.
அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை தட்டிப்பறித்தனர். போலீசார் உடனடியாக வந்து அவரை அப்புறப்படுத்தினர். மதுரையில் பொதுமக்கள் கூடியிருந்த நீதிமன்ற வளாகத்தில் அழகிரி ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications