மூடிய மண்டபத்திற்குள் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் அழகிரி…!
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பியுமான அழகிரி இன்று மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் மூடிய மண்டபத்திற்குள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி, பிரதமர் மன்மோகன்சிங், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்தார். மேலும், பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கையும் அவர் சந்தித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, அழகிரி, தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்காக ஆதரவாளர்களுடன் அழகிரி இன்று மதுரையில் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த நிலையில் மதுரை முழுவதும் கலைஞர் திமுக என்ற பெயரில் அழகிரி புதிய கட்சி தொடங்க இருப்பதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை சர்ச்சை
திமுக-வின் தென் மாவட்ட அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி, ஸ்டாலினுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினார்.
கருணாநிதியைத் தவிர, யாரையும் தலைவராக ஏற்க முடியாது, குறிப்பாக, ஸ்டாலினை தலைவராக ஏற்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்தார்.

போஸ்டர்கள் கிளப்பிய பூதம்
திமுக தலைமையை விமர்சித்து மு.க. அழகிரி ஆதரவாளர்கள் சிலர் மதுரை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சுவரொட்டிகளை ஒட்டினர். இதுதொடர்பாக, அவரது ஆதரவாளர்களான மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 5 பேர் திமுகவிலிருந்து தாற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டனர்.

அழகிரி நீக்கம்
இதையடுத்து, மு.க.அழகிரியும் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதுடன், கட்சியிலிருந்தும் தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.

ஆதரவாளர்களுடன் ஆலோசனை
அழகிரி புதிய கட்சி தொடங்கப் போவதாக பரபரப்பு செய்தி வெளியானது. இந்த நிலையில் மதுரையில் ஆதரவாளர்களுடன் மார்ச் 17ம் தேதி ஆலோசனை நடத்தி முடிவு செய்யவிருப்பதாக, சென்னையில் சில நாள்களுக்கு முன் தெரிவித்திருந்தார் அழகிரி.

கட்சியும், கொடியும் ரெடி
இந்த நிலையில், மதுரை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில், திங்கள்கிழமை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் மு.க. அழகிரியை வரவேற்று, "கலைஞர் திமுக பொதுச் செயலாளரே வருக, வருக, கட்சி, கொடி ரெடி' என அவரது ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

தயா மகாலில் கூட்டம்
இந்த நிலையில் மதுரையில் அழகிரிக்குச் சொந்தமான தயா மகாலில் மூடிய மண்டபத்திற்குள் அவசர ஆலோசனையில் அழகிரி ஈடுபட்டுள்ளார். இக் கூட்டத்தில் திருவள்ளூர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

கட்சியை அறிவிப்பாரா?
செய்தியாளர்கள் யாரும் மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இன்று நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தில் புதிய கட்சி அறிவிப்பை அழகிரி வெளியிடுவாரா? அல்லது இரண்டு மாதம் கழித்து முடிவெடுப்பேன் என்று அறிவிப்பாரா?
மூடிய மண்டபத்திற்குள் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் அழகிரி…
அழகிரி ஆதரவாளர்களுடன் ஆலோசனை












Click it and Unblock the Notifications