எல்லாத்துக்கும் நாங்கதானா? அழகிரி பேரணி குறித்த கேள்விக்கு பொன் ராதாகிருஷ்ணன் கிண்டல்!!
அழகிரியின் சென்னை பேரணிக்கு பாஜகதான் காரணமா என்ற கேள்விக்கு எல்லாவற்றுக்கும் நாங்கள் தானா என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கிண்டலடித்துள்ளார்.
திருச்சி: அழகிரியின் சென்னை பேரணிக்கு பாஜகதான் காரணமா என்ற கேள்விக்கு எல்லாவற்றுக்கும் நாங்கள் தானா என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கிண்டலடித்துள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 30ஆம் நாளை முன்னிட்டு அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி நேற்று சென்னையில் பேரணி நடத்தினார்.
தன்னை திமுகவில் சேர்க்காத ஸ்டாலினுக்கு தனது பலத்தை காட்டவே இந்த பேரணி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து முக்கிய அறிவிப்பை அழகிரி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எதையும் கூறவில்லை.
பொன் ராதாகிருஷ்ணன்
அழகிரியின் பேரணிக்கு பின்னால் பாஜக இருப்பதாகவும் திமுகவை உடைக்க அக்கட்சி சதி செய்வதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
எல்லாத்துக்கும் நாங்கள்தானா?
அப்போது அழகிரியின் பேரணிக்கு பின்னால் பாஜகதான் இருப்பதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பொன் ராதாகிருஷ்ணன், எல்லாத்துக்கும் நாங்கள்தானா என கிண்டலாக கேட்டார்.
திரும்பி பார்க்க வைத்துள்ளது
மேலும் அவர் பேசியதாவது, சென்னையில் அழகிரி தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணி தமிழக அரசியலில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
உடைப்பது வேலை இல்லை
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி மற்ற கட்சிகளை கட்டுப்படுத்தியுள்ளது. எந்த கட்சியையும் உடைப்பது பா.ஜ.,வின் வேலை இல்லை. எங்கள் கட்சியை வளர்ப்பது தான் முதல் வேலை.
பாஜக சொல்வதை வைத்துதான்
பாஜக சொல்வதை வைத்துதான் அரசியல் செய்ய வேண்டிய நிலை தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் பாஜக சொல்வதை வைத்துதான் அரசியல் செய்கின்றனர். அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நிலையில் பாஜக உள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழகத்தில் நடைபெற்ற சிபிஐ மற்றும் வருமான வரித்துறை சோதனைகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.