கருணாநிதியை உள்நோக்கத்துடன் சந்திக்கவில்லை.. உடல்நலம் குறித்து மட்டும் விசாரித்தேன்: மு.க. அழகிரி
கருணாநிதியை மு.க. அழகிரி மீண்டும் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை எந்த ஒரு நோக்கத்துக்காகவும் தாம் சந்திக்கவில்லை; அவரது உடல்நலம் குறித்து மட்டுமே விசாரித்தேன் என்று அவரது மூத்த மகன் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பின்னர் கோபாலபுரம் சென்றாலும் கருணாநிதியை அழகிரி சந்திக்காமல் தவிர்த்து வந்தார். அண்மையில் கருணாநிதிக்கு ஒவ்வாமையால் கொப்பளங்கள் ஏற்பட்டன.
இதனால் கருணாநிதிக்கு ஓய்வு தேவைப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது. அப்போது கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் அழகிரி.
கோபாலாபுரத்துக்கு 2 முறை சென்று கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் அழகிரி. இதனால் திமுகவில் மீண்டும் அழகிரி சேர்க்கப்படக் கூடும் எனவும் யூகங்கள் வெளியாகின.
இதனிடையே வெளிநாடு சென்றுவிட்டு திரும்பிய அழகிரி நேற்று முன்தினமும் கருணாநிதியை சந்தித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அழகிரி, கருணாநிதியை எந்த நோக்கத்துடனும் தாம் சந்திக்கவில்லை; அவரது உடல்நிலை குறித்து மட்டுமே விசாரிக்க வந்தேன். நீங்களாக யூகித்துக் கொண்டால் நான் கவலைப்படமாட்டேன் என கூறியுள்ளார்.