மாட்டிறைச்சி தடை பற்றி வாயே திறக்காத எடப்பாடி.. நண்பர் எனச் சொல்லவே வெட்கப்படுகிறேன்: தா.பாண்டியன்
மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை பற்றி வாயே திறக்காத முதல்வருக்கு ஜெயலலிதாவிடம் இருந்த துணிச்சலில் ஒரு சதம் கூட இல்லை என்று தா. பாண்டியன் தாக்கிப் பேசினார்.
சென்னை: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், மாட்டுக்கறி தடைக்கு எதிரான கருத்தரங்கம் ஒன்றை சென்னை பெரியார் திடலில், திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் பேசியதாவது:
ஜெ.வின் துணிச்சல்
மாட்டுக்கறி தடை பற்றி படித்து பார்த்து பதில் சொல்கிறேன் என்று சொல்லும் எடப்பாடியை நண்பர் என்று சொல்லக் கூட வெட்கமாக இருக்கிறது. ஜெயலலிதாவிற்கு இருந்த துணிச்சலில் 100ல் ஒரு பங்கு கூட இல்லாதவர் பழனிச்சாமி.
திருவள்ளுவரே எதிரிதான்
திருவள்ளுவரையே எதிரியாக கருதுபவர்கள் இவர்கள். அப்படி இருக்கும் போது நம்மை எப்படி நண்பர்களாக பார்ப்பார்கள். தமிழர்கள் மேல் தொடுக்கப்படும் பண்பாட்டு தாக்குதல்தான் மாட்டிறைச்சிக்கு தடை என்பது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வெண்மைப் புரட்சி
வெண்மை புரட்சி நடத்திக் காட்டியவர் டாக்டர் குரியன் என்பவர். காந்தியவாதியான இவர் குஜராத் மாநிலத்தில் அமுல் பால் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கியவர். அவரை தூக்கி அடித்தவர்தான் இப்போதுள்ள மோடி.
அமர்த்தியா சென்
பல்வேறு தரப்பில் இருந்து பணத்தை திரட்டி நாளந்தா பல்கலைக்கழகத்தை செப்பனிட்டு சீர் செய்யப்பட்டது. பின்னர் அதற்காக பெரும்பாடுபட்ட நோபல் பரிசு புகழ் அமர்த்தியா சென் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். மோடி ஆட்சிக்கு வந்த உடன் அமர்த்திய சென்னை நீக்கிவிட்டு, ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவரை அந்தப் பதவியில் உட்கார வைத்தார்கள்.
சோதிடம்
அவர் வந்த உடன் சோதிடத்தை பாடத்திட்டத்தில் கொண்டு வந்தார்கள். புத்தர் தொடர்பான அனைத்தையும் பாடத்திட்டத்தில் இருந்து எடுத்துவிட்டார்கள். இது போன்ற அட்டூழியங்களை செய்து வருபவர்தான் மோடி என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பொருளாதார அழிப்பு
கால்நடைகளின் தலைமையகம் இந்தியா என்று சொல்லக் கூடிய அளவிற்கு கால்நடைகள் இங்கு அதிகம். அது தொடர்பான தொழில்கள் இங்கு அதிகம். மாட்டிறைச்சி அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறார். இந்தியாவின் பொருளாதாரத்தை அழிக்கவே மோடி மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருக்கிறார். இதனை திரும்பப் பெறும் வரை போராட வேண்டும்.