இந்த இரு உயிர்களும் பறி போக என்ன காரணம்.. வறுமையா, போதையா!
வறுமையால் பாட்டியும், பேரனும் விஷம் அருந்தி மரணமடைந்தனர்.
Recommended Video
புதுக்கோட்டை: கொடுமை கொடுமை வறுமை கொடியது... அதனினும் கொடியது இளமையில் வறுமை... ஔவையின் இந்த 2 வரிகளும் இன்றுவரை மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது.
ஆவுடையார்கோயில் பக்கத்தில் பரமந்தூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் எல்லோருமே சட்டி, பானை செய்யும் குயவர்கள்தான். அதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் இங்கு அதிகம்.
குடிபோதை
இந்த தொழிலை செய்து வருபவர்தான் தங்கராசு. இவரது மனைவி 10 வருஷத்துக்கு முன்னாடி ஆண் குழந்தையை பிரசவித்தபோதே உயிரிழந்து விட்டார். எப்போது மனைவி இறந்துவிட்டாரோ அப்போதே வேலைக்கு போவதும் தங்கராசுக்கு குறைந்துவிட்டது. போதாக்குறைக்கு போதையும் சேர்ந்துவிட்டது. எப்போதாவது வேலை செய்வது, அதில் வரும் பணத்தை வைத்து குடித்து கொண்டிருப்பது. இதுதான் தங்கராசு.
கூலி வேலை
பெற்ற 9 வயது பையனை கவனிப்பது கூட கிடையாது. தங்கராசுவின் அம்மா சொர்ணவள்ளிதான் பேரனை கவனித்து கொள்கிறார். தங்கராசுக்கு சொர்ணவள்ளி எவ்வளவோ புத்தி சொல்லியும் கேட்கவில்லை. தங்கராசு அம்மாவையும் கவனிக்கல.. மகனையும் கவனிக்கல. வயசான காலத்தில் சொர்ணவள்ளி கூலி வேலை செஞ்சிதான் பேரனுக்கு சாப்பாடு போட்டு வந்தார்.
போதை-வறுமை
ஆனாலும் மகன் ஒரு பக்கம் போதையில் விழுந்து கிடப்பதையும், பேரன் அரைகுறை வயிறு சாப்பாட்டுடனே இருப்பதை சொர்ணவள்ளியால் தாங்க முடியவில்லை. இதையெல்லாம் கண்ணால் பார்க்காமல் போய் சேர்ந்துவிடலாம் என்று நினைத்து தற்கொலை செய்ய முடிவெடுத்தார். ஆனால் செத்துபோய்விட்டால், பேரனை யார் பார்ப்பார்கள், இப்போதே கால் வயிறு, அரை வயிறுதான். யாரிடம் போய் கையேந்தி நிற்பான். தான் இல்லையென்றால் அதுவும் கிடைக்காமல் பட்டினி கிடந்தே செத்து போய்டுவான் என்று நினைத்து அவனையும் தன்னுடன் சேர்த்து கொண்டு போய்டலாம் என்று முடிவெடுத்துவிட்டார்.
இறுதி சடங்கு
எலி மருந்து விஷம் வாங்கி வந்த சொர்ணவள்ளி பேரனுக்கும் அதை கொடுத்து, தானும் வாங்கி சாப்பிட்டுவிட்டார். கொஞ்ச நேரத்தில ரெண்டு பேருமே சுருண்டு விழுந்து இறந்துவிட்டனர். இதை எல்லாத்தைவிட கொடுமை, இறுதி சடங்கு செய்ய போதை மகனிடம் பணம் இல்லை. உறவினர்கள், அக்கம் பக்கத்து ஆட்கள்தான் உதவி செய்தனர்.
வறுமையா? போதையா?
இந்த விபரீதத்திற்கு காரணம் வறுமையா? போதையா? எதுவானால் என்ன, ஒரு பாவமும் அறியாத அந்த 9 வயசு பிஞ்சுவின் மரணம்தான் ரொம்பவே நம்மை உலுக்கி எடுக்கிறது.