நெல்லையை வட்டமிட்டு வலம் லட்சக்கணக்கான வண்டுகள்.. சிக்கித் திணறும் பொதுமக்கள்
நெல்லை: நெல்லை உணவு பொருள் சேமிப்பு கிடங்கில் இருந்து லட்சகணக்கில் வண்டுகள் படையெடுத்து பொதுமக்களை பதம் பார்த்து வருவதால் அவர்கள் பீதியில் உள்ளனர்.
நெல்லை பாளையங்கோட்டை சாரள் தாக்கா் கல்லூரி அருகே அரசின் சேமிப்பு கிடங்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ரேசன் கடைகளுக்கு வினியோகிக்கப்படும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சேமித்து வைத்து வழங்கப்படுகிறது. ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து வரும் அரிசி மூட்டைகளில் சிறிய அளவிலான வண்டுகள் புகுந்து அதிக அளவில் உற்பபத்தியாகின்றன.

இந்த வண்டுகள் தற்போது கிடங்கு வளாகத்தில் லட்சக்கணக்கில் பெருகி விட்டன. இவை பறந்து அருகே உள்ள குடியிருப்புவாசிகளை பயத்தில் தள்ளி வருகின்றன. அதிகாரிகள் அவ்வப்போது மருந்து அடித்து பிரச்சனையை சமாளித்து வருகி்ன்றனர்.
இந்த நிலையி்ல் கடந்த சில நாட்களாக இந்த தொல்லை அதிகரித்து வருவதால் அதிகாரிகளும், பொதுமக்களும் இயல்பு வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், நுகர்பொருள் சேமிப்பு கிடங்கில் இருந்து கிளம்பும் வண்டுகளால் கடந்த சில நாட்களாக கடும் சிரமத்தை சந்திக்கிறோம். கொசு வலை அமைத்தும் கதவின் இடுக்குகள் வழியாக வந்து விடுகின்றன. இரவில் மின் விளக்கை போட்டால் அவ்வளவுதான், இரவு முழுவதும் தூங்க முடியாது.
இந்த வண்டுகள் வகை தொகை இல்லாமல் உடலின் அனைத்து இடங்களையும் பதம் பார்க்கிறது. இதனால் பலருக்கு உடலில் அலர்ஜி ஏற்பட்டு தடிப்புகள் உண்டாகிறது. பொதுமக்களை விரட்டி விரட்டி கடிப்பதால் அவர்கள் பயத்தில் உள்ளனர். அரிசி மூட்டைகளை தரையில் வைத்து அதன் மீது பிளாஸ்டிக்கால் கவர் செய்து மருந்து அடிக்க வேண்டும். அப்படி செய்கிறார்களா என்று தெரியவில்லை. குடோனில் உள்ள ஜன்னல் பகுதிகளை அடைத்து வைக்க வேண்டும். இந்த வண்டுகள் நாளுக்கு நாள் பெருகி வருவதால் அச்சமாக இருக்கிறது என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications