குப்பை தொட்டியில் கிடந்த பிச்சைக்காரரின் பணத்தை எடுக்க பொதுமக்கள் போட்டா போட்டி!
சென்னை: பிச்சைக்காரரின் சில்லரை காசுகளை எடுத்துச் செல்ல பொதுமக்கள் கூட்டம் கூடியதால் போலீசாரை வரவழைத்து கூட்டத்தை கலைக்க செய்யும் அளவுக்கு நிலைமை போன சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார் பாளையம், கிருஷ்ணன் தெருவில் குட்டி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் விஸ்வநாதன் என்ற பிச்சைக்காரர் வாடகைக்கு தங்கியிருந்தார். ஆனால் ஆறு மாத காலமாக வீட்டு உரிமையாளருக்கு விஸ்வநாதன் வாடகை பணமே தரவில்லை என்று கூறப்படுகிறது.
வாடகையை தருமாறு பலமுறை குட்டி கேட்டுக்கொண்டும், விஸ்வநாதன் வாடகை பணத்தை தரவில்லை. வீட்டின் வெளிப்புறத்தையும் எப்போதும் விஸ்வநாதன் பூட்டியே வைத்திருப்பாராம். ஆறு மாதமாக வாடகை தராத ஆத்திரத்தில் விஸ்வநாதன் போட்டிருந்த பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த குட்டி, அவரது பொருட்களை எடுத்து அருகிலுள்ள குப்பை தொட்டியில் வீசியுள்ளார்.
அப்படி வீசியதில் ஒரு மூட்டை அவிழ்ந்துள்ளது. அவிழ்ந்த மூட்டைக்குள் இருந்து 5, 10, 50, 100 ரூபாய் நோட்டுகள் வெளியில் நீட்டியபடி இருந்துள்ளன. மேலும், சில்லரை காசுகளும் விழுந்துள்ளன. இதை சிலர் பார்த்து பிச்சைக்காரரின் சில்லரை மட்டும் நோட்டுக்களை அள்ளி சட்டை பையிலும், பேண்டு பாக்கெட்டிலும் திணித்துள்ளார். இதை பார்த்த மேலும் சிலர் பைகளை எடுத்து வந்து காசு எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இப்படியே கூட்டம் சேர்ந்து பிச்சைக்காரரின் பணத்தை பிரிப்பதில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்டம் கலைக்கப்பட்டுள்ளது. பிச்சைக்காரர் ஒருவரின் பணத்தை பிரிக்க மக்கள் போட்டி போட்ட சம்பவம் காஞ்சிபுரம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications