பெங்களூரு சிறை அதிகாரி அனிதாவுக்கு மாதம் ரூ3 லட்சம் லஞ்சம் தந்த தினகரன்- கைதிகள் திடுக் தகவல்
சென்னை: சசிகலா சொகுசாக இருக்க பெங்களூரு பரப்பன அக்ரகார சிறை கண்காணிப்பாளர் அனிதாவுக்கு மாதந்தோறும் ரூ3 லட்சம் லஞ்சமாக டிடிவி தினகரன் கொடுத்து வருகிறார் என சிறை கைதிகள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
சிறை அதிகாரிகளுக்கு சசிகலா ரூ2 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் பெங்களூரு சிறையின் கண்காணிப்பாளர் அனிதா தலைமை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்துக்கு எதிராக பெங்களூரு சிறைக் கைதிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

தினகரனிடம் லஞ்சம்
அனிதாவை முற்றுகையிட்டும் சிறை கைதிகள் கெரோ செய்துள்ளனர். அப்போது சசிகலா அக்கா மகன் தினகரனிடம் இருந்து ரூ3 லட்சம் மாதந்தோறும் லஞ்சம் வாங்கி வருவது நீங்கள்தானே என குற்றம்சாட்டி கைதிகள் முழக்கம் எழுப்பியிருக்கின்றனர்.

ஆதாரங்கள் அழிப்பு
அத்துடன் சசிகலா சிறையில் சொகுசாக இருந்த ஆதாரங்கள் அனைத்தையும் நாங்கள் பார்க்கவே அழித்ததும் மறைத்ததும் நீங்கள்தானே எனவும் அனிதாவுடன் சிறை கைதிகள் வாக்குவாதம் செய்துள்ளனர். சசிகலாவுக்கு மட்டுமல்ல முத்திரை தாள் மோசடி மன்னன் தெல்கிக்கும் அனிதாவே உதவி செய்து வருகிறார் என்பதும் பெங்களூரு பரப்பன அக்ரகார சிறை கைதிகளின் புகார்.

வீடியோவில் அனிதா
சசிகலா சிறையைவிட்டு வெளியே போய் ஷாப்பிங் செய்துவிட்டு தெனாவெட்டாக திரும்பும் வீடியோவில் அவருக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிதான் இந்த அனிதா என்பது குறிப்பிடத்தக்கது. அனிதா மீது கடும் நடவடிக்கை தேவை என்பது பெங்களூரு சிறை கைதிகளின் புகார்.

யார் இந்த அனிதா?
பெங்களூரு சிறை தலைமை கண்காணிப்பாளராக கிருஷ்ணகுமாரும், கண்காணிப்பாளராக அனிதாவும் இருந்தனர். ரூபா விவகாரத்தில் கிருஷ்ணகுமார் மாற்றப்பட்டு அனிதா தலைமை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். கைதிகள் போராட்டத்தால் இப்போது ரூபா இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள டிஐஜி ரேவண்ணாவே பெங்களூரு சிறையின் தலைமை கண்காணிப்பாளர் பொறுப்பாளர். அனிதா மீண்டும் கண்காணிப்பாளராக பணியில் தொடர்கிறார்.

விசாரணை
இதனிடையே டிஐஜி ரூபாவின் ரூ2 கோடி லஞ்ச புகார் தொடர்பாக அதிகாரி வினய்குமார் நேற்று பெங்களூரு சிறையில் விசாரணை நடத்தினர். இதனால் மற்ற சிறை கைதிகளின் உறவினர்களிடம் அதிகாரிகள் கெடுபிடி காண்பித்ததும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications