வெற்றிவேல் வெளியிட்ட ஜெ., வீடியோவால் சசிகலா மீதான களங்கம் போய்ருச்சு.. புகழேந்தி
வெற்றிவேல் வெளியிட்ட ஜெ., வீடியோவால் சசிகலா மீது இருந்த களங்கம் துடைக்கப்பட்டு உள்ளதாக புகழேந்தி தெரிவித்து உள்ளார்.
சென்னை: வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ மூலம் சசிகலா மீது இருந்த களங்கம் துடைக்கப்பட்டு உள்ளதாக டி.டி.வி தினகரனின் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி.
டி.டி.வி தினகரனின் ஆதரவாளரும், முன்னாள் ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல் நேற்று காலை ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவை தான் தனிப்பட்ட முறையிலேயே வெளியிட்டதாகவும் இதில் டி.டி.வி தினகரனுக்கும், சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பெங்களூரு புகழேந்தி, வெற்றிவேல் தன்னுடைய தனிப்பட்ட முறையில் அந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது தேவை இல்லாமல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை பொறுத்துக்கொள்ள முடியாமலே அவர் அப்படி செய்து உள்ளார் என்று தெரிவித்து உள்ளார்.
நான் இதுகுறித்து ஏற்கனவே டி.டி.வி தினகரனிடம் வீடியோ பதிவை வெளியிடலாம் என்று பல மாதங்களுக்கு முன்பே கூறி இருந்தேன். ஆனால் அதற்கு தினகரன், அம்மா அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு தான் மலிவான அரசியல் நடத்த வேண்டும் என்கிற நிலை நமக்கு இல்லை என்று தெரிவித்தார். அப்படி நினைத்த அவர் வீடியோவை வெளியிட நிச்சயம் அனுமதித்து இருக்கமாட்டார் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
தேவை இல்லாத பொய் குற்றச்சாட்டுகள் வைத்த எதிர் அணியினர், சசிகலா மீது பழி போட்டார்கள். ஆனால், அவர்களுக்கே ஜெயலலிதாவை அவர்கள் எப்படி பார்த்துக்கொண்டார்கள் என்பது நிச்சயம் தெரியும். அப்படியும் தெரியாவிட்டால் வெளியான வீடியோவை பார்த்தாவது தெரிந்து கொள்ளட்டும்.
சசிகலாவிற்கு பொதுமக்களிடமும், பெண்களிடமும் நல்ல மரியாதை இருக்கிறது. அதை திட்டமிட்டு கெடுக்கவே கொலை குற்றச்சாட்டுகள் கிளப்பி விடப்பட்டன. இந்த வீடியோ மூலம் அவர் மீது இருந்த களங்கம் துடைக்கப்பட்டு உள்ளது என்று பெங்களூரு புகழேந்தி தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications