10 வருடமாக அழுக்குடன் சுற்றி வந்த அமிதாப்பச்சன்.. ஒரே நாளில் உஜாலாவுக்கு மாறிய உற்சாக கதை!
10 வருடங்களுக்கு முன்பு தொலைந்தவரை குடும்பத்தார் கண்டுபிடித்துள்ளனர்.
கன்னியாகுமரி: சீப்பு பார்த்தே மாத வருடங்களான பரட்டை தலை - அழுக்கு உடம்பு - தலை முதல் கால் வரை அழுக்கு துணி, நீண்டு வளர்ந்து தொங்கும் "சால்ட் அண்ட் பெப்பர்" தாடி.. என்றிருந்த அமிதாப்பச்சன் திடீரென உஜாலாவுக்கு மாறி பளிச் ஆடையுடன் ஜம்மென்று ஆகிவிட்டார். எப்படி?
எங்காவது சுற்றுலா போனால், குழந்தைகள் மீது ஒரு கண் எப்போதும் நமக்கு இருக்கும். காரணம் அவர்கள் எங்கும் தொலைந்து விடக்கூடாதே என்று. ஆனால் சுற்றுலாவில் ஒரு பெரியவரே காணாமல் போய் இருக்கிறார் பீகார் மாநிலத்தில். இப்போது அல்ல. 10 வருஷத்துக்கு முன்னாடி. அவர் பெயர்தான் அமிதாப்பச்சன். வயது 64.
காணாமல் போன அமிதாப்
கஞ்ச் பகுதியை சேர்ந்த அமிதாப்பச்சனுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். நன்றாக இருந்த அமிதாப்பச்சனுக்கு சில வருடங்களில் மனநலம் லேசாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், 10 வருஷத்துக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்திற்கு தனது உறவினர்களுடன் டூர் சென்றிருக்கிறார். அப்போது அமிதாப்பச்சன் தொலைந்து போய்விட்டார். அதாவது வழி தவறி வேறு எங்கோ போய்விட்டாராம். இதனால் அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். எங்குமே கிடைக்காததால், ஸ்டேஷனில் ஒரு கம்ப்ளைண்டும் கொடுத்துவிட்டு அவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்துவிட்டனர்.
கன்னியாகுமரியில் உறவினர்கள்
இந்த நிலையில், அதே உறவினர்கள் மீண்டும் டூர் அடித்திருக்கிறார்கள். இப்போது தமிழ்நாட்டு பக்கம் வந்திருக்கிறர்கள். கன்னியாகுமரிக்கு பஸ் ஒன்றினை வாடகைக்கு பிடித்து, அதில், தங்களுக்கு தேவையான துணிமணிகளுடன் பாத்திரம், பண்டங்கள், ஸ்டவ் என தட்டுமுட்டு சாமான்களுடன்தான் வந்திறங்கினார்கள்.
கிழிந்த துணியுடன் அமிதாப்
எங்கெல்லாம் சுற்றி பார்க்கிறார்களோ அங்கெல்லாம் அடுப்பை பற்ற வைத்து சாப்பாடு செய்து சாப்பிட்டு கொள்வதுதான் இவர்கள் வேலை. அப்படித்தான் கடற்கரையோரம் குடும்பத்தார் சமையல் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அமிதாப்பச்சன் அழுக்கு தலை, கிழிந்த துணி, தாடி கோலத்துடன் இவர்களை கடந்து நடந்து சென்று கொண்டிருந்தார்.
முத்தமழையில் அமிதாப்
அவரை குடும்பத்தார் ஒரு கணம் உற்று பார்த்துவிட்டு பின்னர் அடையாளம் கண்டுகொண்டனர். சந்தோஷத்தில் துள்ளி குதித்து அமிதாப்பச்சனை கட்டிப்பிடித்து கொண்டனர். சிறிது நேரத்துக்கு அங்கே ஒரே முத்தமழைதான். உடனே அங்கேயே குடும்பத்தார், சோப்பை எடுத்து அவரை குளிப்பாட்டினார்கள். புது துணியை உடுத்தி விட்டார்கள். பின்னர் தாங்கள் வந்த பஸ்ஸிலேயே அமிதாப்பச்சனை ஏற்றிக் கொண்டு ஊர் கிளம்பி சென்றனர்.
தோற்றம் மாறிய அமிதாப்
இதையெல்லாம் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பார்த்து பரவசமானார்கள். அழுக்கு துணி, பரட்டை தலையுடன் 10 வருடங்களாக தங்கள் கண்முன் எப்போதுமே சுற்றிக் கொண்டிருந்த அமிதாப்பச்சன், இப்போது, தோற்றமே மாறி குடும்பத்தாருடன் இணைந்து ஊருக்கு கிளம்பியதை நினைத்து அங்கிருந்த நடைபாதை வியாபாரிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
வியாபாரிகள் பரம திருப்தி
எப்படியோ... சுற்றுலாவில் தொலைந்து போனவர், சுற்றுலாவிலேயே மீண்டும் கிடைத்துவிட்டார் என மனதிருப்தியடைந்தது அமிதாப் குடும்பத்தினர் மட்டுமில்லை.. ரத்தபந்தமே இல்லாத 10 ஆண்டுகள் அமிதாப்புக்கு சாப்பாடு கொடுத்த அந்த நடைபாதை வியாபாரிகளும்தான்! அதனால்தான் அமிதாப் கிளம்பி சென்ற பஸ் அவர்கள் கண்ணில் இருந்து மறையும்வரை கையசைத்தே நின்றார்கள்.