இன்றைக்குள் கூட்டணி இறுதியாகி விடும்... பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை
சென்னை: பாஜக கூட்டணி இன்றைக்குள் இறுதியாகி விடும். யார் யார் கூட்டணியில் திருப்தி அடைந்தார்கள் என்பது இன்று தெரிய வரும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நேற்று பாஜக தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார் பொன். ராதாகிருஷ்ணன். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், பாஜக மாவட்ட நிர்வாகிகளை அழைத்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். கூட்டணி, வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தோம்.
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் 20ம் தேதி அதாவது வியாழக்கிழமை சென்னை வருகிறார். அப்போது கூட்டணி இறுதியாகி விடும். யார் யாரெல்லாம் கூட்டணியில் திருப்தி அடைந்துள்ளார்கள் என்பதும் இன்றைக்குள் தெரிந்து விடும்.
ராஜ்நாத் சிங் சென்னை வரும்போது அவரைச் சந்திக்க கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் அழைத்துள்ளோம். நான் கூட்டணி தொடர்பான இறுதிப் பட்டியலுடன் ராஜ்நாத் சிங்கைச் சந்திக்கவுள்ளேன். அவரிடம் தொகுதிப் பங்கீட்டுக்கு ஒப்புதல் பெறப்படும் என்றார் ராதாகிருஷ்ணன்.
கூட்டணிக் குழப்பம் நீடிக்கிறதே என்ற கேள்விக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முழுமை அடைந்துள்ளது என்று பதிலளித்தார் ராதாகிருஷ்ணன்.