ராஜபக்சே இருக்கட்டும்.. எம்.பி. சீட், மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா? கவலையில் தேமுதிக!
சென்னை: நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் ராஜபக்சே கலந்து கொள்வதற்கு பாஜகவின் கூட்டணிக் கட்சியான மதிமுக நேற்றே கண்டனம் தெரிவித்துவிட்டது. ஆனால் பாமக, தேமுதிகவை ஆகியவை மவுனம் காத்து வருகின்றன.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி வரும் 26-ந் தேதி பதவியேற்க இருக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் அமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான மதிமுக பொதுச்செயலர் வைகோ மிகக் கடுமையாக எதிர்த்துள்ளார். ஆனால் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான தேமுதிக கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது.
ஆறுதலான மோடி பாராட்டு
லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்த தேமுதிகவுக்கு இப்போது ஆறுதலாக இருப்பது டெல்லியில் மோடியின் பாராட்டுகள்தான்.
நிச்சயம் சீட்டு, அமைச்சர் போஸ்ட்
அதுவும் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோருக்கு வெளிப்படையாக பாராட்டுகளை மோடி தெரிவிக்கப் போய் கேப்டன் குடும்பம் இப்போது கனவில் மிதந்து கொண்டிருக்கிறது.
சுதீஷ் அல்லது பிரேமலதாவுக்கு எப்படியும் ஒரு ராஜ்யசபா சீட் கிடைத்துவிடும்.. மத்தியில் அமைச்சர் பதவியும் கிடைத்துவிடும் என்பதுதான் விஜயகாந்த் குடும்பத்தின் கனவு.
இந்த நேரத்தில் ராஜபக்சே
இந்த கனவை கலைக்கும் வகையில் ராஜபக்சே விவகாரம் வெடித்திருக்கிறது. தேமுதிகவைப் பொறுத்தவரையில் காங்கிரஸோடும் பாஜகவோடும் ஒரே நேரத்தில் பேரம் பேசிய கட்சி.. அந்த கட்சிக்கு கொள்கை என்று எதுவுமே இல்லை.
கொள்கையே இல்லையே..
அது ஈழத் தமிழர் பிரச்சனையாக இருந்தாலும் உள்நாட்டுத் தமிழர் பிரச்சனையாக இருந்தாலும் குடும்ப நலனைத் தவிர வேறு எந்த ஒரு கோட்பாடுமே இல்லாத கட்சி அது.
கிடைக்கலைன்னா கச்சேரி
இப்போதைய ஒரே கொள்கை கொண்ட கொள்கை என்பதெல்லாம் எம்.பி.சீட், அமைச்சர் பதவி மட்டுமே.. ஒருவேளை இந்த இரண்டுமே இப்போதைக்கு கிடைக்காது என்பது உறுதியானால் 'கொள்கை சிங்கமாக' ராஜபக்சேவை எதிர்த்து விஜயகாந்த் அறிக்கை விடவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.