பாஜகவில் மூத்தத் தலைவர்கள் புறக்கணிக்கப்படவில்லை: வெங்கையா நாயுடு
சென்னை: பாரதீய ஜனதாவில் மூத்தத் தலைவர்கள் புறக்கணிக்கப் படவில்லை என அக்கட்சியின் மூத்தத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் சீட் வழங்கும் விவகாரத்தில் பாஜக மூத்தத் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனை உறுதி செய்யும் வகையில் அக்கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான அத்வானி முதலில் தான் விரும்பிய தொகுதி கிடைக்காத கோபத்தில் இருப்பதாக சொல்லப்பட்டது.

பின்னர் அவர் சமாதானம் அடைந்து தனக்கு ஒதுக்கப் பட்டத் தொகுதியை ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து மற்றொரு மூத்தத்தலைவரான ஜஸ்வந்த் சிங், தான் வேண்டிய தொகுதி கிடைக்காத கோபத்தில் சுயேட்சையாக போட்டியிட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபலும் தனது தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பாஜக தனது மூத்தத் தலைவர்களை மதிப்பதில்லை எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் வெங்கையா நாயுடு. அப்போது அவர் கூறியதாவது :-
பாரதீய ஜனதாவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கட்சி ஒற்றுமையுடனேயே உள்ளது. அத்வானி போன்ற தலைவர்களை புறக்கணிப்பதாக எவ்வாறு நினைக்கமுடிகிறது. இந்திய அரசியலில் மிக உயர்ந்தவர் அத்வானி. அவர் தொடர்ந்து எங்களை வழிநடத்த வேண்டும். கட்சிக்கும் நாட்டுக்கும் அவர் தேவை.அத்வானிக்கு தொகுதியை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் காந்திநகர் தொகுதியை தேர்ந்தெடுத்தார்' என்றார்.
மேலும், ஜஸ்வந்த் சிங் பர்மர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளாரக போட்டியிடுவது குறித்து கேட்கப் பட்ட போது, ‘அவருக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை .இந்த கோபத்தால் அவர் சிலவற்றை கூறியிருக்கலாம்.ஜஸ்வந்த் சிங் இதுபோன்று எதையும் செய்யமாட்டார். கட்சி அவரை எப்போதும் மதிக்கிறது.கட்சி அவரை ராஜ்யசபா எம்பியாக்கியது. கட்சிதான் அவரை நிதி அமைச்சராகவும், வெளியுறவுதுறை அமைச்சகராகவும் ஆக்கியது.எனவே புறக்கணிக்கிறார்கள் என்ற கேள்விக்கே இடமில்லை' என விளக்கமளித்தார் வெங்கையா நாயுடு.












Click it and Unblock the Notifications