டிடிவி தினகரனை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? தமிழிசை சாடல்
ஆர்.கே.நகரில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனை தொகுதி மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி: சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனை அதிமுக தொண்டர்களும், தொகுதி மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்தை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதிக்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அதிமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல் திமுக சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் கிருஷ்ணகிரியில் இன்று பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரை அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த தொகுதி மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
திமுக வேட்பாளராக பலம் வாய்ந்த நபரை அறிவிக்காமல் ஏதோ பெயருக்கு ஒரு வேட்பாளரை அறிவித்துள்ளார்கள். இந்த தேர்தலில் தி.மு.க. ஆர்வம் காட்டவில்லை என்பது போல தெரிகிறது. இடைத்தேர்தலை பொறுத்த வரையில் தி.மு.க.வின் செயல்பாட்டில் சந்தேகமாக இருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக போட்டியிடும். உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது போல இந்த இடைத்தேர்தலிலும் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்றார்.