எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்...பாஜக தலைவர் தமிழிசை தடாலடி
தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வாக விரைவில், தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் நடக்க அதிக வாய்ப்புள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
திருவள்ளூர்: தமிழக அரசியல் குழப்பங்களைத் தீர்க்க மிக விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக தமிழ் மாநில இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது.இதில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் , ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில், சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதலால் உயிர் நீத்த 26 ராணுவ வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தால் உடல் சிதைக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழிசை," நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு மிகப் பெரிய உதவியை செய்யும். அதனுடைய முடிவு வரும் போது தான் தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் அது குறித்து உணர்வார்கள். எதற்காக இந்த நீட் தேர்வு என்பது குறித்து தெரிந்து கொள்ளாமல், பொத்தாம் பொதுவாக வேண்டாம் என்று சொல்வதால் அந்த மாணவர்களின் தன்னம்பிக்கையை குறைத்து விடும்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான பணியை பாஜக தொடங்கி விட்டது. தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என்று தெரிவித்தார்.