மக்கள் ஆதரவைப் பெற்ற மெர்சல் பட வசனத்தை நீக்கச் சொல்லி விஜய்க்கு பாஜக மிரட்டல்!
மத்திய அரசுக்கு எதிரான காட்சிகளை 2 நாட்களுக்குள் நீக்காவிட்டால் மெர்சல் படத்தை ஓடவிடமாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் மத்திய அரசுக்கு எதிரான காட்சிகள் இருப்பதால் பா.ஜ.கவினர் கொந்தளிக்கின்றனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை 2 நாட்களுக்குள் நீக்காவிட்டால், தியேட்டர்களில் படத்தை ஓட்ட விட மாட்டோம் என்கின்றனர் பா.ஜ.கவினர்.
விலங்குகள் நல வாரியத்தின் அனுமதியைப் பெறாததால் நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தை வெளியிட அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
இதன்பின்னர், விலங்குகள் நல வாரியத்தின் உறுப்பினர்கள் படத்தைப் பார்த்து சான்றிதழ் அளித்தனர். பல்வேறு தடைகளைத் தாண்டி மெர்சல் படம் வெளியாகிவிட்டது.

அரசுக்கு எதிரான காட்சிகள்
ஆனாலும் படத்தில் ஜி.எஸ்.டி வரி மற்றும் டிஜிட்டல் இந்தியா ஆகியவற்றுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாகக் கொந்தளிக்கின்றனர் தமிழக பா.ஜ.கவினர். நேற்று சென்னை திருவொற்றியூரில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர்.தமிழிசை, அரசியலுக்கு வருவதற்காக இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார் நடிகர் விஜய். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால், அவர் மீது வழக்கு தொடரப்படும் என்றார் ஆவேசத்தோடு.

பொன்னாரும் எதிர்ப்பு
இன்று காலை நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மற்ற நாடுகளில் எப்படியெல்லாம் வரி விதித்துள்ளார்கள் என்பது பற்றிப் பேசவேண்டிய அவசியமில்லை. நமது நாட்டின் சூழல்கள் வேறு. பிற நாடுகளின் சூழல் என்பது வேறு.

நேரடியாக வாங்க
அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பினால், நடிகர்கள் நேரடியாக வரட்டும். அப்படிச் செய்யாமல், திரைப்படங்களில் தவறான அரசியல் கருத்துகளைப் பரப்பக்கூடாது. பத்திரிகையாளர் சோ அரசியல் தொடர்பான திரைப்படங்களை எடுத்திருக்கிறார். அவை ரசிக்கும்படியாக இருக்கும். வரி விதிப்பு முறைகள் பற்றி உண்மைக்கு மாறாக உள்ள வசனங்களைத் திரைப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றார் கொதிப்போடு.

படம் ஓடாது
மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என மாநில நிர்வாகிகள் குரல் கொடுத்து வருகின்றனர். சென்சார் போர்டு அனுமதி கொடுத்த பிறகு காட்சிகளை எப்படி நீக்குவது? எனக் கேட்கின்றனர் படக்குழுவினர். துப்பாக்கி படத்தில் இதேபோன்று சர்ச்சைக்குரிய காட்சிகள் வெளியானபோது, எதிர்ப்புக் குரல் கிளம்பியது. இதையடுத்து படக்குழுவினர் அந்தக் காட்சிகளை நீக்கிவிட்டனர். அதேபோல், மெர்சல் படத்திலும் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும். முதலமைச்சர் சந்தித்து அனுமதி வாங்கிவிட்டால் எதை வேண்டுமானாலும் வெளியிட்டு விட முடியுமா? பிரதமரின் நடவடிக்கைகளை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இங்குள்ள சிலருக்கு மோடி என்றாலே இளக்காரமாகிவிட்டது என நிர்வாகிகள் கூட்டத்திலும் பாஜகவினர் பேசியுள்ளனர். முதல்வர் மூலமாகவே அழுத்தம் கொடுத்து காட்சிகளை நீக்க வலியுறுத்துவோம். 2 நாட்களில் காட்சிகளை நீக்காவிட்டால், மெர்சல் படம் எந்த இடத்திலும் ஓடாது" என சீறினார் தமிழக பா.ஜ.க மாநில நிர்வாகி ஒருவர்.

மெர்சல் மூலம் அரசியல்
மெர்சல் படத்தை முன்வைத்து அரசியல் களத்தை அதிரிபுதிரியாக்கத் திட்டமிட்டுள்ளனர் பா.ஜ.கவினர். இதற்கு மெர்சல் குழுவினரின் எதிர்வினை என்ன என்பதை அரசியல் வட்டாரத்தினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications