ஆடு தான் மேய்ச்சிருப்பேனா..? ஆ.ராசா பேசிய வீடியோவை குறிப்பிட்டு அண்ணாமலை கொடுத்த பதில்!
சென்னை : கருணாநிதியால் தான் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரி ஆனார் என்றும் இல்லையென்றால் இன்னும் அவர் ஆடுதான் மேய்த்துக் கொண்டிருப்பார் என்றும் திமுக எம்.பி ஆ.ராசா பேசியதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
திமுக துணை பொதுச் செயலாளரும் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, "கருணாநிதி பேனா சிலைக்கு 80 கோடி ரூபாயா என கேட்கிறார்கள், அந்தப் பேனா எந்தப் பேனா என்றால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய, சைக்கிள் ரிக்சா கொடுத்த, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கிய சட்டத்தில் கையெழுத்திட்ட கலைஞரின் பேனாவுக்குத்தான் தற்போது சிலை வைக்கப்பட உள்ளது.
அண்ணாமலையின் சமூக பொருளாதார முன்னேற்றம் போதாது என்று கருணாநிதிக்குத் தெரியும். அதனால் தான் அந்தச் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். அப்படி சேர்த்ததால் தான் அண்ணாமலை இன்று ஐபிஎஸ் அதிகாரி. கருணாநிதியின் பேனா இல்லை என்றால் அண்ணாமலை ஆடு மாடு மேய்த்துக்கொண்டு இருப்பார்." எனப் பேசினார்.
கலைஞர் போட்ட கையெழுத்தால்தான் அண்ணாமலை ஐ.பி.எஸ் ஆனார், இல்லையென்றால் ஆடு மேய்த்துக் கொண்டிருப்பார் என திமுக பொதுச் செயலாளர் ஆ ராசா பேசியதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "என் பேனா, என் மை, என் பெற்றோர், நண்பர்கள் மற்றும் எனது ஆசிரியர்கள் அளித்த ஆதரவு. என்னைப் போல் பலர், அடுத்த கட்டத்திற்கு முன்னேறப் பல தியாகங்களைக் கடந்து, பல போராட்டங்களைச் சந்தித்து வந்துள்ளனர்.
வசதியாக ஒரு அறைக்குள் அமர்ந்து மற்றவர்களின் சாதனைக்கு உரிமை கொண்டாடுவது, ஸ்டிக்கர் ஒட்டுவது, இவை மட்டுமே திமுகவினரின் பங்களிப்பு" எனத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.