மகளுக்கு தீபாவளி சீர் கொண்டு சென்ற தாய் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்
கடலூர்: குள்ளஞ்சாவடி அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி மற்றும் அவரது பேத்தியின் உடல்கள் 8 நாட்களுக்குப் பிறகு அங்குள்ள முட்புதர் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கின. குறிப்பாக குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி ஆகிய பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இந்த வெள்ளத்தில் சிக்கி குள்ளஞ்சாவடி தங்கிலிகுப்பத்தைச் சேர்ந்த சாந்தி (43) மற்றும் அவரது பேத்தி இந்துமதி (15) ஆகிய இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் அவர்களது உடல்களை தீவிரமாக தேடி வந்தனர். தொடந்து அந்த பகுதிகளில் மழை பெய்து வந்ததால் அவர்களது உடல்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில், மழைவிட்டு வெள்ளம் வடியத் தொடங்கியதையடுத்து அவர்களது உடல்கள் தங்கிலிக்குப்பம் வாய்க்காலுக்கு அருகே உள்ள முட்புதரில் சிக்கிக்கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து, இருவருடைய உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புதுவையைச் சேர்ந்த சாந்தி, தனது மகள் வனிதாவை தங்கிலிக்குப்பத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். தீபாவளி பண்டிகைக்கு மகளுக்கு சீர்வரிசை கொடுப்பதற்காக சாந்தி தனது பேத்தி இந்துமதியுடன் புதுச்சேரியில் இருந்து தங்கிலிகுப்பத்துக்கு கடந்த 9-ம் தேதி சென்றார். பேருந்தை விட்டு இறங்கிய அவர்கள் இருவரும் வழியில் உள்ள வாய்க்காலில் இறங்கி நடந்து சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் இருவரும் சிக்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
கைக்கோர்த்த நிலையில் பிணமாகக் கிடந்த இருவரது உடல்களையும் கண்ட ஊர் மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.












Click it and Unblock the Notifications