உள்ளே ரெய்டு.. வெளியே கமகம வாசம்..திரண்ட தொண்டர்களுக்கு வெஜ் பிரியாணி போட்ட செந்தில் கார்த்திகேயன்!
கோவை : கோவையில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெறும் திமுக பிரமுகரும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவருமான செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் குவிந்துள்ள தொண்டர்களுக்கு வெஜ் பிரியாணி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி உட்பட அவருக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்கள் என 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று தமிழ்நாடு முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர், கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் மட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 22 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
கோவையில், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் செந்தில் கார்த்திகேயனின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் ஐ.டி சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த செந்தில் கார்த்திகேயன் கடந்த ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர் மு.க ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
செந்தில் பாலாஜியோடு நெருக்கமான இவர் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட ஐ.டி அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து ரெய்டு நடத்தி வருகின்றனர்.
அப்போது அங்கு ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்தனர். இதையடுத்து அங்கு குவிந்த திமுக தொண்டர்களுக்கு பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. தொண்டர்கள் அமர்வதற்காக சேர்கள் போடப்பட்டன.
செந்தில் கார்த்திகேயன் வீட்டில் ஐ.டி ரெய்டு தொடர்ந்து வரும் நிலையில், மதிய உணவாக வெஜ் பிரியாணி அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்களில் பெரிய பிரியாணி அண்டா கொண்டு வரப்பட்டு, அங்கு நின்ற அனைவருக்கும் வெஜ் பிரியாணி வழங்கப்பட்டது. பாக்கு மட்டை தட்டுகளில் வெஜ் பிரியாணி வாங்கி அங்கேயே அமர்ந்து திமுக தொண்டர்கள் சாப்பிட்டனர்.
அமைச்சருக்கு நெருக்கம்..செந்தில் கார்த்திகேயன் வீடு, ஆபீசில் சல்லடை போடும் ஐடி ஆபீசர்ஸ்! யார் இவர்?