மத்திய பட்ஜெட் 2015: என்னென்ன சலுகைகள்… எகிறும் எதிர்பார்ப்புகள்
சென்னை: மோடி அரசு தாக்கல் செய்யப்போகும் முதல் முழு மத்திய பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கிறது. அதில், இத்தடவை நடுத்தர மற்றும் பாமர மக்களுக்கு என, என்னவெல்லாம் கிடைக்கப் போகிறது என்ற கேள்வி முன்நிற்கிறது.
டெல்லி தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்ததை அடுத்து நடுத்தர மக்களின் ஆதரவை பெறுவதற்காக இந்த தேர்தலில் வரிச்சலுகை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது.
வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்தலாம் அல்லது வரிவிலக்குக்கான முதலீடு செய்யப்படும் தொகை அளவினை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

தனிநபர்களுக்கு மட்டுமல் லாமல் நிறுவனங்களுக்கும் சில சலுகைகள் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்காகவும், வேலை வாய்ப்பினை உருவாக்கவும் இந்த சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
வீட்டுக்கடனுக்கு செலுத்தும் தொகையில் கூடுதல் வரி விலக்கு வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். இப்போது ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய் வீட்டுக்கடன் வட்டி செலுத்துவதன் மூலம் வருமான வரி விலக்கு பெறலாம். இந்த தொகையை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த பெரும்பாலானவர்கள் கேட்டிருக்கின்றனர்.
மருத்துவத்துறையில்
மாநிலங்களுக்கு, சற்று கூடுதலாக வரி வருவாய்ப் பங்கீடு இதனால் கிடைக்கும். ஆனால், மற்றொரு தகவலோ, கடந்த பல ஆண்டுகளாக, கல்வி, சுகாதாரம் போன்ற சமூகநலத் திட்டங்களுக்கு, மத்திய பட்ஜெட் காட்டிய அக்கறை குறைவாக இருந்தது என்ற தகவலும் வந்திருக்கிறது.
தனியார்துறையில் வளர்ச்சி
இன்றைய சூழ்நிலையில் அதிக வசதி தரும் சுகாதார மற்றும் மருத்துவ வசதி, 65 சதவீதம் தனியார் துறையில் இருக்கிறது. சென்னை போன்ற பெரிய நகரங்களில், அதிக அளவு தனியார் மருத்துவமனை சேவைகள் முன்னணியில் உள்ளன. மத்திய அரசு இத்துறையில், மாநில அரசுகளுடன் இணைந்து புதிய பரிமாணத்தில் இச்சுகாதாரத் திட்டத்தை எப்படி அணுகப் போகிறது என்பது இன்றுள்ள வினா.
உயிர்பறிக்கும் நோய்கள்
தற்போது பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருந்த போதும், அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில், அது கட்டுக்குள் இருப்பதற்கு மருத்துவ விழிப்புணர்வு காரணமாகும். 'புற்றுநோய் பாதிப்பு அடைந்தவர்களை, ஆரம்ப கட்டத்தில் பரிசோதிக்கும் கிராமப்புற டாக்டர்களுக்கு, அதைப் பற்றிய நவீன தகவல்கள் போதுமானதாக இல்லை. அதனால் முற்றி பலர் பாதிக்கப்படுகின்றனர்' என, இத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
நவீன சிகிச்சை முறைகள்
அடுத்ததாக, நீரிழிவு நம்மை மிரட்டும் அபாயமாகி வருகிறது. இதுதவிர இதய நோய், நெஞ்சக நோய் என்ற பாதிப்பும் உள்ளது. மருத்துவத் துறையில் மாற்றங்கள் வந்துள்ளது உண்மை என்றாலும், அதிக செலவில்லாத அல்லது பணம் பறிக்காத துறையாக மாற, அரசின் கொள்கை வழிகாட்டுதல் இப்போது தேவை. அதன் மூலம் சீரான மருத்துவ இன்சூரன்ஸ், கட்டுப்படியாகும் செலவில் மருந்து, நவீன சிகிச்சை முறைகள் ஆகியவற்றை ஏற்படுத்த பட்ஜெட் வழிகாட்டுமா என்பது, இன்று எதிர்பார்க்கப்படும் விஷயம்.
அரசியல் கட்சியினர்
மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பொது பட்ஜெட்டில் மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமாகா, சமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பொது பட்ஜெட்டில் வேளாண்மை, கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, மருத் துவ வசதி உள்ளிட்ட பல்துறை வளர்ச்சிக்கான திட்டங்கள் இருக்க வேண்டும். ஏழை, எளியோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மகளிர், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய அனைத்துப் பிரிவினர் நலனையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்கிறார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்.
விவசாயிகளுக்கு இடுபொருட்கள்
விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களான விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவை முழு மானியத்தில் வழங்க வேண்டும். காற்றாலை மின்சார உற்பத்தியில் கிடைக்கும் லாபத்தை அதிலேயே மறு முதலீடு செய்யும்போது முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும். இளைஞர்களுக்கு உதவும் வகையில் பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்க வேண்டும்.
கல்வி, சுகாதாரம்
விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசியத் துறைகளின் வளர்ச்சிகளுக்கு ஏற்ற திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். தனிநபர் வருமான வரி உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். மத்திய வருவாயில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் தொகையை 32 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தயாரித்து வழங்க வேண்டும் என்கிறார் சமத்துவ மக்கள் கட்சித்தலைவரும் எம்.எல்.ஏவுமான சரத்குமார்.
மாநிலங்களின் பங்கு
மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தி இருப்பதாக 14-வது திட்டக் குழு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. உண்மையில், தமிழகம் உட்பட 9 மாநிலங்களின் பங்கு 13-ம் திட்டக் காலத்தில் இருந்ததைவிட குறைக்கப்பட்டுள்ளது என்கிறார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்.
நிதி ஒதுக்க வேண்டும்
13-வது திட்டக்காலத்தில் தமிழகத்துக்கு மத்திய வரி வருவாயில் 4.969 சதவீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இப்போது 4.023 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு சமூகநலத் திட்டங்களும் பாதிப்புக்குள்ளாகும். எனவே, பட்ஜெட்டில் இதற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா அருண்ஜெட்லி.












Click it and Unblock the Notifications