காணும் இடம் எல்லாம் கரகாட்டம்… வாணவேடிக்கை…: களைகட்டும் ஸ்ரீரங்கம்
திருச்சி: கிராமங்களில் திருவிழாக்களில் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் என களைகட்டும். இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஸ்ரீரங்கம் தொகுதி கிராமங்கள் அதிகம் நிறைந்த தொகுதி என்பதால் கிராம மக்களைக் கவர கரகாட்டம், ட்ரம்ஸ் சகிதமாக வாக்கு கேட்டு செல்கின்றனர் வாக்காளர்கள். இதனால் ஸ்ரீரங்கம் தொகுதி திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
பல்வேறு ஊர்களைச் சேர்ந்த அதிமுக, திமுகவைச் சேர்ந்த கட்சியினர் ஸ்ரீரங்கத்தில் களமிறங்கியுள்ளதால் காணும் இடமெங்கும் கரைவேட்டிகள்தான். ஐநூறு, ஆயிரம் என சரளமாக பணம் புரள்கிறது. டீ கடையோ, ஹோட்டலோ இடைத்தேர்தலை முன்னிட்டு ஸ்ரீரங்கவாசிகளுக்கு வியாபாரம் சூடுபிடித்துள்ளது. வடையும் டீயும் சாப்பிட்டபடியே அம்மாவைப் பற்றியும், தலைவர்களைப் பற்றியும் பேசி பொழுதை கழிக்கின்றனர்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் சட்டம் - ஒழுங்கு சீராக உள்ளதை உறுதிப்படுத்தும் வகையில், துணை ராணுவப் படையினர் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.

அமைச்சர்கள் பிரச்சாரம்
இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளர் வளர்மதிக்கு ஆதரவாக அக்கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் களமிறங்கியுள்ளதால் அதிமுக வேட்பாளர் பக்கம் கூட்டம் களை கட்டியுள்ளது.

தாடி சகிதமாக
அம்மா முதல்வராக மீண்டும் நாற்காலியில் அமரும்வரை தாடி எடுக்கமாட்டேன் என்று சபதம் போட்டுள்ள வருவாய் துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் வீடு வீடாக நடந்து சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.

முதல்வர் மகன்கள்
ஜெயலலிதா அறிவித்த தேர்தல் பணிக் குழுவில் முதல்வர் பன்னீர்செல்வம் இடம்பெறவில்லை. அவரது மகன்களான ரவீந்திரநாத் குமாரும், பிரதீப்பும் திருச்சியில்தான் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தேர்தல் பணிகளும் அவர்களின் கட்டுக்குள்தான் உள்ளனவாம்.

வீடு வீடாக வாக்கு கேட்டு
வளர்மதி வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த அன்றே ரவீந்திரநாத்தும் அவரது சகோதரர் பிரதீப்பும் ஸ்ரீரங்கம் வந்துவிட்டார்கள். ஸ்ரீரங்கம் 4வது வார்டு பொறுப்பு வகிக்கும் ரவீந்திரநாத், திருவானைக்காவல் பகுதிகளில் தனது ஆதரவாளர்களுக்காக சகல வசதிகளுடன் கூடிய வீட்டை வாடகைக்குப் பிடித்துக்கொடுத்துள்ளார். ரவீந்திரநாத்தும் அபார்ட்மென்ட் ஒன்றில் தங்கியிருக்கிறார்.

போடுங்கம்மா ஓட்டு
ஓட்டு கேட்டு செல்லும் இடங்களில் எல்லாம், 'இவர்தான் நம்ம முதலமைச்சரோட பையன்!' என்று லோக்கல் கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள் ரவீந்திரநாத்துடன் செல்பவர்கள். அங்கெல்லாம் ரொம்பவே அடக்கத்துடன் கையெடுத்துக் கும்பிடுகிறார் ரவீந்திரநாத்.

அப்டேட் பிரதீப்
பெரும்பாலும் பிரதீப் வெளியில் வருவதில்லை. அபார்ட்மென்ட்டில் இருந்தபடியே அத்தனை நிகழ்வுகளையும் கம்ப்யூட்டரில் அப்டேட் செய்வது தொடங்கி, ஸ்ரீரங்கம் நிலவரத்தை மேலிடத்துக்குத் தெரியப்படுத்துவது வரை திரைமறைவில் நடக்கும் அத்தனை விவகாரங்களையும் கவனித்துக்கொள்கிறாராம் பிரதீப்.

கட்சிக்கொடி தோரணங்கள்
பல வீடுகளில் கிராம மக்கள் தங்கள் ஆதரிக்கும் கட்சி கொடிகளை ஏற்றி வைத்துள்ளனர். கட்சிகளின் தேர்தல் அலுவலகங்கள் அருகிலும் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. வேட்பாளர் வாக்கு சேகரிக்க வரும்போது சில கிராமங்களில் வாணவேடிக்கை மற்றும் சர வெடிகளுடன் வேட்பாளர்களை ஆர்ப்பாட்டமாக வரவேற்கின்றனர்.

ஆரத்தி எடுங்கம்மா
அமைச்சர்கள், வேட்பாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் வரும்போது கிராமத்தில் உள்ள பெண்கள் போட்டி போட்டு ஆரத்தி எடுக்கின்றனர். அப்பத்தானே தட்டுல 500 ரூபா நோட்டா விழும். அதை கண்டும் காணாமல் அப்படியே அமுக்கி விடுகின்றனர் பெண்கள்.

களைகட்டும் கரகாட்டம்
கிராமங்களில் வேட்பாளர் வாக்கு சேகரிக்கும் போது முன்னே கரகாட்டம் ஆடிச்செல்கின்றனர். இது தவிர அரசியல் கட்சிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலைக்குழுக்கள் நடிகர்கள் வேடமிட்டு ஆடல்- பாடல் களைகட்டுகிறது. இதனால் திருவிழா நடப்பதுபோல் கோலாகலமாக காணப்படுகிறது.

டிராபிக் ராமசாமி
அதேசமயம் எந்தவித ஆடம்பரமும் இன்றி காக்கி பேன்ட், வெள்ளை சர்ட். சட்டையின் இரண்டு பாக்கெட் முழுவதும் கத்தையாக மனுக்கள். கையில் பிட் நோட்டீஸோடு சர்வ சாதாரணமாக வலம் வருகிறார் சமூக சேவகர் டிராஃபிக் ராமசாமி. பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் ஆளும் கட்சியின் விதிமீறல்களை அப்படியே தனது கேமராவில் பதிவும் செய்துகொள்கிறார்.

உச்சக்கட்ட பாதுகாப்பு
ஸ்ரீரங்கம் தொகுதி முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணிக்காக 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஸ்ரீரங்கம் வந்துள்ளனர். இவர்கள் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இடைத்தேர்தலையொட்டி ஸ்ரீரங்கம் தொகுதியில் 10 சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு துணை ராணுவப் படையினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

கொடி அணிவகுப்பு
ஸ்ரீரங்கம் தொகுதியில் சட்டம் - ஒழுங்கு சீராக உள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் அவர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர். பெட்டவாய்தலையில் தொடங்கி ஜீயபுரம் வரை கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. தேர்தல் வாக்குப்பதிவிற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உச்சகட்ட பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

ஒரே கொண்டாட்டம்தான்
ஒருபக்கம் வாக்கு சேகரிப்பு மறுபுரம் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு என கலவையாக உள்ளது ஸ்ரீரங்கம் தொகுதி. ஆனாலும் தேர்தல் முடிவடையும் வரை எங்ளுக்கு திருவிழா கொண்டாட்டம்தான்' என மகிழ்ச்சியடைகின்றனர் ஸ்ரீரங்கம் தொகுதிவாசிகள்.












Click it and Unblock the Notifications