நீதி கேட்கும் பிரசாரத்திற்கு வாகனம் ரெடி...ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குஷி !
நீதி கேட்கும் பிரசாரப் பயணத்திற்காக தயாரகியுள்ள வாகனத்தை தனது ஆதரவாளர்களுடன் பார்வையிட்டார் ஓ.பன்னீர்செல்வம்.
சென்னை: அதிமுக தொண்டர்களை ஒன்று திரட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீதி கேட்கும் பிரசாரப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இவருடன் தீபாவும் பயணிக்க உள்ளார். இதற்காக பிரத்யேகமான வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து சசிகலா மீது அதிருப்தியில் இருந்த அ.தி.மு.க. எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்து அவரது கரத்தை பலப்படுத்தினர்.
ஓபிஎஸ் அணியில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மாபா பாண்டியராஜன், டாக்டர் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏக்கள் ஆறுகுட்டி, செம்மலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அணி சேர்ந்துள்ளனர்.
இந்தநிலையில் அதிமுக தொண்டர்களை ஒன்று திரட்ட ஓபிஎஸ் அணி புதிய வியூகம் வகுத்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் நீதி கேட்கும் பிரசார சுற்றுப்பயண திட்டமும் வகுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக ஜிப்சி டைப் ஜீப் ஒன்று தயாராகியுள்ளது. அதனை தனது ஆதரவாளர்களுடன் பார்வையிட்டார் ஓ.பி.எஸ். இதனால் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் குஷியில் உள்ளனர்.