பேசாமல் ரஜினியோட "மாஸ் சைக்காலஜி" ஒரு டோஸ் எடுத்துக்கலாமே எச். ராஜா!
ரஜினி கூறிய மாஸ் சைக்காலஜி அட்வைஸை எச்.ராஜா போன்றோர் செயல்படுத்தினால் அவர்களுக்கு நல்லாயிருக்கும்.
Recommended Video

சென்னை: மக்களிடம் கவனமாக இருக்க வேண்டும். எதை பேச வேண்டும், எதை பேசக் கூடாது என்று ரஜினி நேற்று சொன்ன அறிவுரையை எச். ராஜா போன்றோர் பின்பற்றினால் அவர்களுக்கு நன்மை பயக்கும்.
அரசியல்வாதிகள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளில் பேசி மாட்டிக் கொள்வது சகஜம். ஆனால் பெரும்பாலான கருத்துகள் வேண்டுமென்றே பதிவு செய்யப்படுவதாக கருத்துகள் நிலவுகின்றன.
இன்னும் சில அரசியல்வாதிகள் நாம் லைம் லைட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதற்காகவே சர்ச்சைக்குரிய கருத்துகளை மட்டுமே தேர்வு செய்து பதிவு செய்து உலா வருகின்றனர்.

கவலை இல்லை
பொது வெளியில் எதை பேச வேண்டும், எதை பேச கூடாது என்ற நடைமுறையை நாம் கடைப்பிடிப்பது முக்கியம். இதன் மூலம் பின்விளைவுகளை நாம் தடுக்கலாம். யாகாவராயினும் நா காக்க என்ற குறளுக்கு ஏற்ப செயல்பட்டால்தான் அரசியல் என்றில்லை எந்த துறையிலும் சோபிக்க முடியும்.

சிறந்த உதாரணம்
பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா சமீபகாலங்களாக சர்ச்சைக்குரிய கருத்துகளையே (மட்டுமே) பேசி வருகிறார். மேலும் அதையே சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகிறார். இவர் போன்ற அரசியல்வாதிகள் உணர்ச்சிவயப்பட்டு கருத்துகளை பதிவு செய்வதால் ஏற்படும் மனஉளைச்சல், விளைவுகளை குறித்து கவலைப்படவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டுதான் பெரியார் குறித்து அவர் செய்த பதிவு.

எச் ராஜா பதிவு
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியிழந்ததை அடுத்து அங்கிருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது போல் தமிழகத்திலும் திராவிட கட்சிகளின் ஆட்சி முடிவுக்கு வரும் போது பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்ற அர்த்தத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு இன்று காலையிலிருந்து கண்டனங்கள் குவிகின்றன.

பதிவை நீக்கிய ராஜா
இதனால் பயந்து போன ராஜா தனது பேஸ்புக் பதிவை நீக்கிவிட்டார். இருப்பினும் அவர் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

கடைப்பிடிக்கலாம்
இந்த இடத்தில் ரஜினியின் அட்வைஸை ராஜா கடைப்பிடிக்கலாம். ரஜினிகாந்த் நேற்று ஒரு விழாவில் பேசியபோது, மக்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக பேச வேண்டும். மக்களின் உளவியல் உணர்வுகளைப் புரிந்து கொண்டு பேசுவது நல்லது. இது சினிமாவுக்கும் பொருந்தும். ஒரு சினிமா படத்தை அத்தனை முறை அலசி ஆராய்ந்து தயாரித்து அதை திரையிடுவோம். ஆனால் ஒரே காட்சியில் மக்கள் இது சரி, இது சரியில்லை என்று சொல்லிவிடுவர். அதுதான் மாஸ் சைக்காலஜி. அது போல் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு எதை பேச வேண்டும், எதை பேசக் கூடாது என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார் ரஜினி.

கட்சிக்கு நன்மை
இந்த அறிவுரை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ எச்.ராஜாவுக்கு கனகச்சிதமாக பொருந்துகிறது. எனவே அவர் ரஜினியின் மாஸ் சைக்காலஜி அறிவுரையை புரிந்து கொண்டு செயல்பட்டால் அவருக்கு மட்டுமல்ல, அவர் சார்ந்த கட்சிக்கும் நன்மை பயக்கும்.












Click it and Unblock the Notifications