ஸ்டாலின் சிறந்த நிர்வாகி, சீமான் சிறந்த போராளி... ரஜினியின் உள்நோக்கம் புரியவில்லையே... பொன்.ராதா
மு.க.ஸ்டாலின் சிறந்த நிர்வாகி, சீமான் சிறந்த போராளி என்று நடிகர் ரஜினி காந்த் தெரிவித்ததன் உள் நோக்கம் புரியவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாகர்கோவில்: மு.க.ஸ்டாலின், சீமான் ஆகியோரை நடிகர் ரஜினி காந்த் பாராட்டியிருப்பதற்கான உள்நோக்கம் புரியவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த 5 நாள்களாக ரசிகர்கள் ரஜினிகாந்த் சந்தித்து வந்தார். கடைசி நாளான வெள்ளிக்கிழமை அவர் ரசிகர்கள் முன்னிலையில் உரையாற்றினர்.
அப்போது அவர் பேசுகையில் , மு.க.ஸ்டாலின் சிறந்த நிர்வாகி, சீமான் சிறந்த போராளி, அவரது பேச்சுகளை கேட்டு நானே பிரமித்திருக்கிறேன். தொல் திருமாவளவன் திறமைசாலி, அன்புமணி ராமதாஸ் புதுமையை புகுத்துபவர் என்று தெரிவித்தார்.
நாகர்கோவிலில் பேட்டி
இதுகுறித்து நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. அவர் பாஜகவில் இணைந்தால் மகிழ்ச்சி அடைவோம்.
போருக்கு தயார் என்றால்...
அரசியலுக்கு வர வேண்டுமா அல்லது பாஜகவில் இணைய வேண்டுமா என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாகும். ஆனால் போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்கிறாரே அதுதான் என்னவென்று புரியவில்லை.
உள்நோக்கம் புரியல
ஸ்டாலின் சிறந்த நிர்வாகி, சீமான் சிறந்த போராளி என்று ரஜினி கூறியிருக்கிறார். அதன் உள்நோக்கம் எனக்கு புரியவில்லை.தமிழகம் கடந்த பல ஆண்டுகளாக நடிப்புத் துறையின் பிடியில்தான் இருக்கிறது என்பது தவறு. யார் எந்த துறையில் இருக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. எப்படிப்பட்ட ஆட்சி என்பதுதான் முக்கியம். என்னை பொறுத்தவரையில் தமிழகத்தில் பாஜக ஆட்சிதான் வரவேண்டும்.
கால்கள் இல்லை
தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையை சொல்ல போனால், தமிழகத்தில் எந்த கட்சிகளுக்கும் கால்கள் இல்லை. ஊன்றிய காலையும் அதிமுகவும், திமுகவும் எப்போதோ இழந்துவிட்டன. தமிழர்களின் பிரச்சினைகளை யார் சொல்லியும் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இல்லை என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.