ஐடி ரெய்டுக்காக தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என சட்டம் சொல்லவில்லை! - சு சாமி
கோவை: வருமானவரித் துறை சோதனை நடத்தினால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டத்தில் சொல்லவில்லை என்று பாஜக எம்பி சுப்பிரமணிய சாமி கூறினார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று பேட்டியளித்த சுப்பிரமணிய சாமி கூறுகையில், "ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. தி.மு.க. ஒரு போதும் வெற்றி பெறக்கூடாது.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினால், தேர்தல் ரத்து செய்யப்படும் என்று எந்த சட்டத்திலும் சொல்லப்படவில்லை. வருமான வரித்துறை சோதனைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை. இது அதிகாரிகளின் நடவடிக்கை.
எல்லோரும் ஒன்றுதான்
யாரோ ஒரு வெள்ளைக்காரன் எழுதி வைத்த புத்தகத்தைப் படித்துவிட்டு தருண் விஜய் எம்.பி. தென்னிந்தியர்களை பற்றிபேசியுள்ளார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவரும் ஒன்று தான். இதில் வேறுபாடு கிடையாது. நிறம் பற்றி பேசுவதே தவறு.
டெல்லியில் போராடும் விவசாயிகள், என்னிடம் குறை எதையும் சொல்லவில்லை. அவர்களின் போராட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. முல்லைப்பெரியார் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்ததன் பேரில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் வெற்றி தேடிக் கொடுத்தேன்.
பாராளுமன்றத்தில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த 40 எம்.பி.க்கள் விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாக மத்திய விவசாய அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச வேண்டும்," என்றார்.