ஆஹா.. இந்தவாட்டி கேப்டன் நம்மோட வந்துருவார்... நம்பிக்கையில் "ஸ்டாலின் தளபதிகள்"!!
சென்னை: சட்டசபை நிகழ்ச்சிகளில் தி.மு.க.வும் தே.மு.தி.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்படுவதால் எப்படியும் சட்டசபை தேர்தலில் தங்களது தலைமையிலான அணியில்தான் தே.மு.தி.க. இணையும் என்று தி.மு.க. தளபதிகள் நம்பிக்கையோடு இருக்கின்றனர்.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றிருந்தாலும் இரு கட்சிகளுக்குள்ளும் நெருக்கமான உறவு இல்லை. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவை தே.மு.தி.க. கண்டு கொள்ளாமல் காலை வாரிவிட இரு கட்சிகளிடையே மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டு விட்டது.

இந்நிலையில் கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
கடந்த லோக்சபா தேர்தலின் போதே பேராயர் சற்குணம் நடத்திய ஒரு நிகழ்ச்சிக்கு விஜயகாந்த்தை அழைத்து இருந்தார். அந்த கூட்டத்தில் பேசிய எஸ்றா சற்குணம், தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணிக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
அதற்கு நேரடியாக பதில் சொல்லாத விஜயகாந்த் நேரம் வரும் போது எனது முடிவை அறிவிக்கிறேன் என்றார். ஆனால் மு.க. அழகிரி, விஜயகாந்த்தை கேவலமாக விமர்சிக்க போய் தி.மு.க பக்கம் எடிப்பார்க்காமல் போய்விட்டார் விஜயகாந்த்.
தற்போது இரு கட்சிகளும் கரம் கோர்ப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது போல.. சட்டசபையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார். தே.மு.தி.க.வுக்கு ஆதரவாக அறிக்கைகளும் அவர் வெளியிட்டார்.
இதுவரை மவுனமாக இருந்து வந்த விஜயகாந்த் தனது மவுனத்தை கலைத்து கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தார். இதன் மூலம் பாரதிய ஜனதாவுடனான உறவை முறித்து கொண்டு தி.மு.க. கூட்டணியில் சேர விஜயகாந்த் வியூகம் அமைத்து வருவதாகவே கருதப்படுகிறது.
சட்டசபை பஞ்சாயத்துகளைப் பார்க்கும் ஸ்டாலினின் தளபதிகளும் கூட கேப்டன் இந்தவாட்டி நம்ம கூடத்தான் என்று நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.
அதே நேரத்தில் தே.மு.தி.க.வை விட்டுவிடக் கூடாது என்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட மத்திய அரசு வழக்கறிஞர் பதவி தே.மு.தி.க.வை சேர்ந்த 11 பேருக்கு அள்ளிக் கொடுத்துள்ளது பாரதிய ஜனதா. ஆனாலும் தே.மு.தி.க. கிடைக்கும் வரை அனுபவித்துக் கொண்டு எப்படியும் தி.மு.கவுடன் சேர்ந்துவிடும் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications