மறைந்த கர்தினல் சைமன் லூர்துசாமியின் உடல் புதுச்சேரியில் அடக்கம்
புதுச்சேரி: புதுச்சேரியில் காலமான கர்தினல் சைமன் லூர்துசாமியின் இறுதிச்சடங்கு மற்றும் அடக்கம் இன்று நடைபெற்றது.
ரோம் நகரில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் கர்தினலாக இருந்த சைமன் லூர்துசாமி கடந்த 2 ஆம் தேதி மரணம் அடைந்தார். மறைந்த கர்தினல் சைமன் லூர்துசாமியின் உடல் நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புதுவை வந்தது.
புதுவை காந்தி வீதியில் உள்ள பெத்திசெமினார் பள்ளி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு கவர்னர் வீரேந்திர கட்டாரியா, முதல்வர் ரங்கசாமி, எதிர்கட்சி தலைவர் வைத்திலிங்கம், கண்ணன் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், தமிழகம் மற்றும் புதுவை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து இன்று காலை 10 மணி வரை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து கர்தினல் சைமன் லூர்துசாமியின் உடல் அங்கிருந்து ஊர்வலமாக மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
அங்கு போப் ஆண்டவரின் தூதர் சால்வோ தோரே பொன்னாக்கியோ தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து போப் ஆண்டவரின் இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது.
பின்னர், ஆலயத்தின் சூசையப்பர் கெபி அடியில் கர்தினல் லூர்துசாமியின் உடல் புதைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள கர்தினல்கள், பேராயர்கள், ஆயர்கள், குருமார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் கர்தினல் லூர்துசாமியின் சொந்த ஊரான கல்லேரி பகுதியை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.
கர்தினல் லூர்துசாமியின் உடல் அடக்கத்தை முன்னிட்டு இன்று புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications